ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை

பதிகங்கள்

Photo

ஆம்விதி நாடின் அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடின் புனிதனைப் போற்றுமின்
ஆம்விதி வேண்டும தென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே. 

English Meaning:
Pray and Perform Noble Deeds– This is the Law of Life Eternal
Perform thou noble deeds, good Karma to shape,
Praise thou the Holy One, the Holy Land to reach;
This is the law we need, this the law for men,
Who, blessed with earthly life, seek the Life eternal.
Tamil Meaning:
மக்களாய்ப் பிறக்கின்ற ஊழைப் பெற்ற அருமை அறியவல்லார்க்கு மேலும் உயர்வடைகின்ற நெறி இன்றியமை யாதது. அஃது என்ன என்பதைச் சொல்லுமிடத்து, இவ்வுலகில் மீளவும் பிறந்து உயர்ந்து நிற்கின்ற நெறியை விரும்புவீராயின், பசுபுண்ணியத்தைச் செய்யுங்கள். அவ்வாறின்றிச் சிவலோகத்திற் சென்று சிவானந்தத்தை அடைகின்ற நெறியை விரும்புவீராயின், சிவபெருமானை வழிபடுத லாகிய சிவபுண்ணியத்தைச் செய்யுங்கள்.
Special Remark:
`மானிடர் ஆம் விதி பெற்ற அருமை வல்லார்க்கு ஆம் விதி வேண்டும்; அது என் சொலின்` என எடுத்துக்கொண்டு உரைக்க. ஈரிடத்தும் `நாடி` எனவும் பாடம் ஓதுப. `நாம் விதி வேண்டும்` என ஓதுதல் பாடம் ஆகாது, பின்னர் ``அந்நிலம்`` என்றதனால், முன்னர் `இந்நிலம்` என்பது பெறப்பட்டது. ``வல்லார்க்கு வேண்டும்`` என்றது வேறு முடிபாகலின், \\\\\\\"செய்மின், போற்றுமின்`` என்பன இடவழு ஆகாமை அறிக.