ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை

பதிகங்கள்

Photo

தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதறி யாரவர் தாமே.

English Meaning:
TRANSITORINESS OF LIFE
The Bud Blossoms and Fades; So does Human Life
They see in the sprouting wanton buds on tender twigs
Which all soon they flash their beauty and die;
Yet they praise not the Holy Feet;
Alas! they know not when the sure call comes from High.
Tamil Meaning:
தண்ணிய பூங்கொம்பில் தளிர், தழை, பூ முதலாக அதனால் தோற்றுவிக்கப்படுகின்ற பலவும் அங்ஙனம் தோற்றுவிக்கப் பட்டவாறே நில்லாது உருமாறி அழிகின்றதைக் கண்டும் அறிவில்லா தவர், ஆசிரியர் உண்மையைச் செவியறிவுறுத்துச் சிவபெருமானது திருவடியை அடைய அழைக்கின்ற பொழுதே அவரது சொற்கடவாது அதனையடைதற்கு முயலாது, `பின்பு முயல்வோம்` என்று புறக்கணித் திருப்பர்.
Special Remark:
`அவ்வாறிருப்பின், அவ்வுணர்வு முறுகி எழாது மெலிந்து, முன்போல உலகியலில் ஆழ்ந்து கெடும்` என உணர்வினது நிலையாமை கூறியவாறு காண்க. ஒன்றே செய்க; நன்றே செய்க; நன்றும் இன்றே செய்க` என, `நல்லன செய்தல் வேண்டும் என்ற உணர்வு உண்டாய வழி அப்பொழுதே செய்தல் வேண்டும்` எனக் கூறுதலும், உணர்வு நிலையாமையை நோக்கியேயாம். இன்னும், `புராண வைராக்கியம், மசான வைராக்கியம்` முதலியவற்றாலும் உணர்வு நிலையாமையைக் கூறுப. ``மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு`` (குறள் - 425) என்றாற் போல்வனவற்றாலும் திருவள்ளுவர் உணர்வு நிலையாமையை உணர்த்தினார்.
``நின்னைஎப் போதும் நினையலொட் டாய்; நீ நினையப்புகின்,
பின்னை அப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி``
-தி.4 ப.112 பா.4.
என்றதனாலும் இவ்வுணர்வு நிலையாமை நன்கறியப்படும். உயிர் உளதாகவும் உணர்வு இவ்வாறு நிலையாது போதலின், அதற்குக் கொம்பு கேடின்றி நிற்கவும் அதன்கண் உளவாகின்ற தளிர் முதலியன உருமாறிக் கெடுதல் உவம அளவையாயிற்று. தளிர் முதலியன தோன்றுதல் இயல்பாயினும், அதற்குக் கொம்பு முதலாத லின் அதனால் ஆக்கப்படுவனவாகக் கூறினார். இழைத்தலுக்குக் காலத்தை முதலாக வைத்து உரைப்பினும் அமையும். பிழைப்பு - பிழைத்தல்; பிழை செய்தல். அஃதாவது அழைத்தவாறே உடன்பட்டுச் செல்லாதொழிதல்.
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில். -குறள். 833
என்பவற்றில் இது, ``பேணாமை`` என்னும் குற்றமாம்.
``அருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபர னாகி அருளிய பெருமையைச்
சிறுமையென் றிகழாதே``
-தி.8 போற்றித் திருவகவல் -75-77
என மாணிக்கவாசகரும் அருளிச்செய்தார். எம்பெருமானடியை ஏத்த அழைப்பவர் ஞானாசிரியரேயாதல் அறிக. வேறு தொடராக்காது. `அறியாரவர்தாம், அழைக்கின்றபோது பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்` எனக் கூட்டி உரைக்க.
இதனால், உணர்வு நிலையாமை உவம அளவையின்வைத்து உணர்த்தப்பட்டது.