ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை

பதிகங்கள்

Photo

மத்தளி ஒன்றுளே தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அமைச்சும்அஞ் சுள்ளன
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே. 

English Meaning:
Life`s Drum Shattered to Pieces
One this body-drum, two the rhythms keeping time,
Five the masters who, inside, make display;
But when the great king, indwelling departed,
The drum lay shattered, a heap of inert clay.

Tamil Meaning:
பெரிய அரண்மனை ஒன்றிலே மேல் கீழ்த் தளங்கள் இரண்டு உள்ளன. அந்த அரண்மனைக்குள்ளே வாழ்கின்ற அமைச்சர் ஐவரும், அரசன் ஒருவனும் உளர். அவர்கள் அதன் உள்ளே இருக்கும் பொழுதே அந்த அரண்மனை கால்சாய்ந்து மண்மேல் விழுந்துவிட, அவர்கள் கலக்கம் எய்தியவாறு வியப்பாகின்றது.
Special Remark:
`மத்தளம் ஒன்றோடு கூடிய தாளம் இரண்டு உள்ளன என்பதொரு நயம்தோன்றுதற் பொருட்டு, `மகத் தளி, தளம்` என்ப வற்றை, இடைக் குறைத்தும், முதல் நீட்டியும் கூறினார். மத்தளத்தை `மத்தளி` என்றலும் பொருந்துவதே; இகரம் பகுதிப்பொருள் விகுதி. மத்தளம் ஒன்றாய் நின்றே ஓசைதர, தாளம் இரண்டாய் நின்றே ஓசை தருவது என்பதும் குறித்தவாறு. இவ்வாறு சொல்லளவால் பிறிது பொருள் தோற்றுதலையும் ஒட்டணியின்பாற் படுத்துவர். மகத்தளி - பெரியகோயில்; அரண்மனை; உடம்பு மேல்கீழ்த்தளம் புருவ நடுவும், மூலாதாரமும். அமைச்சர் ஐவர், ஐம்பொறிகள். `அரசரும்` என்பது பாடம் அன்று. அரசன், உயிர். அது மூலாதாரத்துச் சென்று ஒடுங்கும் நிலையில் எல்லாக் கருவிகளும் செயலற்றுப் போக, உயிர்ப்பும் இல் லையாய், உடல் மண்மேல் சாய்ந்து கிடக்கும். இந்நிலையை `மூர்ச்ை\\\\\\\\u2970?` என்பர். `கேவல துரியா தீதம்` என்பதும் இதுவே. இஃது இறப்பு அன் றாகலின், `அரசனும் அமைச்சரும் உள்ளிருக்கும் பொழுதே அரண் மனை சாய்ந்தது வியப்பு` என்றார். சாக்கிரம் முதலாக இவ் வதீதங்காறும் உள்ள அவத்தைகள் ஐந்தும் வினைவழி உயிர்க்கு உளவாவனவாம். ``மண் ஆய்`` என்பதில் `மண்ணின்கண் ஆகி` என உருபு விரித்து, ``ஆய்`` என்றதை, `ஆக` எனத் திரிக்க. ஆதல், இங்கு, பொருந்துதல். மயங்குதலுக்கு வினைமுதல் அமைச்சரும் அரசனும். `வியப்பு` என்பது சொல்லெச்சம்.
இதனால், உணர்வு நிலையாமை, அதீதநிலை நிகழ்ச்சியாகிய காட்சியின் வைத்து உணர்த்தப்பட்டது. மேற்காட்டிய, ``ஒருபுலன் நுகரும்போது`` என்ற சிவஞானசித்தி (பா.187. உரை)ச் செய்யுளில், ``எல்லாம் மாறும் ஒருபொழுது`` என்றதில், ``ஒருபொழுது`` எனப்பட்டது இவ்வதீத நிலையேயாதல் அறிக.