ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை

பதிகங்கள்

Photo

கண்ணனுங் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின் றளக்கின்ற தொன்றும் அறிகிலார்
விண்ணுறுவா ரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே. 

English Meaning:
Know Him the Eye of the eye
We perceive only the external sun and the eye with which we see it,
We do not realise the Lord within who stimulates both the eye and the sun,
Not knowing Him we pass from heaven to hell again and again,
We pass away in the spring of our youth.
Tamil Meaning:
திருமாலும், பகலவனும் உலகத்தை அதன் உள்ளி ருந்தே அளக்கின்றதை உலகர் சிறிதும் நினைக்கின்றிலர். நினைப் பாராயின், அவ்விருவரும் வீடுபேற்றிற்கு உரியவரையும், பிறப்பிற்கு உரியவரையும் முறையே முப்பதுயாண்டு அகவையிலும், அறுபது யாண்டு அகவையிலும் இவ்வுலகத்தினின்றும் பிரிக்கின்றவராவார்.
Special Remark:
`திருமால் உலகத்தை அதன் உள்ளிருந்து ஈரடியாலே அளந்தான் என்பதனை என்றோ ஒரு காலத்து நிகழ்தொழிந்த நிகழ்ச் சியாக எண்ணுதல் கூடாது; என்றும் நிகழ்வதாகவே எண்ணல் வேண்டும்; ஏனெனில், அக்கதையின் உட்பொருள், அவன் காத்தற் கடவுளாதலின், உயிர்கள் பிறக்கும் இடங்களிலெல்லாம் சென்று காத்தற்பொருட்டு அவ்விடங்களைத் தன்னுள் ஓர்ந்துணர்கின்றான் என்பதே ஆதலின்` என்பது நாயனார் கருத்து. அதனால், உலகத்தைத் திருமால் இடவகையாலும், பகலவன் கால வகையாலும் அளக்கின்ற வராதல் அறிக. இப்பொருள் உணரமாட்டாதார் ``கண்ணனும்`` என்னும் பாடத்தை, `கண்ணதும்` என ஓதுப.
``எண்ணுறும் முப்பது`` என்றதற்கு, `முதல் முப்பது. இரண்டா வது முப்பது` மூன்றாவது முப்பது என்று இவ்வாறு எண்ணப் படும் முப்பது` என உரைக்க. இவற்றுள் முதல் முப்பதாண்டிற்குள்ளே கல்வி அறிவு ஒழுக்கங்களால் நிரம்பி, நிலையாமை உணர்வுபெற்று நின்றாரை; `இனி இவர் உலகருள் ஒருவராகவைத்து எண்ணற் பால ரல்லர்` எனவும், அங்ஙனம் அவ்வுணர்வு பெறாதாரை அறுபதாண்டு வரையும் கண்காணித்து நின்று, அத்துணை ஆண்டுகள் கழிந்த பின்ன ரும் நிலையாமை உணர்வு வரப்பெறாதவரை, `இனி இவர் இவ்வுலகத் தில் வாழ்ந்தும் வாழ்நாள் முடிந்தவரேயாவர்` எனவும் காத்தற் கடவுள் துணிந்தொழிதலின், அவ்விருதிறத்தாரும் அவ்வவ் ஆண்டளவில் அக்கடவுளால் உலகத்தினின்றும் பிரிக்கப்படுவோராதல் அறிக. காய்கதிரோன் காத்தற் கடவுளது துணிவிற்குக் கருவியாய் நிற்றல் பற்றி, அவனையும் அக்கடவுளோடு ஒப்பவைத்து எண்ணினார்.
பதினாறாண்டில் மணவினை முடிக்கப்பெற்று முப்பதாண்டின் காறும் உலகியலில் ஈடுபட்டிருப்பினும், கட்டிளமைக் காலம் முப்ப தாண்டோடு முடிவுறுதலின், அதற்குள்ளே நிலையாமை உணர்வு பெறாதொழியின் அதன் பின்னர் அதனைப் பெறுதல் ஐயமேயா தலின், `இவர் வீடு பெறுதற்கு உரியார்` எனக் காத்தற்கடவுள் துணிதற்கு அவ் யாண்டே எல்லையாயிற்று.
இனி, முப்பதாண்டிற்கு மேலாய் அறுபதாண்டின்காறும் செல்லும் காலம், `இவர் இத்தன்மையாராவர்` என்னுந் துணிவினைப் பயவாது ஐயத்தையே தந்து நின்று, அதன்பின் நிலையாமை உணர்வு வருதல் பெரும்பான்மையும் இல்லையாதலின், `இனி இவர்க்கு நிலையாமை உணர்வு வாராது` என்று துணிதற்கு அவ்யாண்டே எல்லையாயிற்று. அறுபதாண்டின் காறும் பற்று விடப்பெறாதவர் பின் விடப்பெறுதல் பெரும் பான்மை இல்லை என்பதே ஆன்றோரது துணிபு. திருநாவுக்கரசு நாயனார்போல அறுபது யாண்டின் பின்னரும் மெய்யுணர்வு பெறுதல் இறைவன் திருவருள் தானே முன்நிற்க நிகழும் அருஞ்செயல் என்க. அது பற்றியன்றே, அந்நாயனார் இறைவன் தம்மை ஆட்கொண்ட நிலையைப் பெரிதும் சிறப்பித்துப் புகழ்கின்றார். இக்காலத்து உள நூலாரும், `அறுபதுயாண்டின் பின்னர் ஒருவர்க்கு மனமாற்றம் உண்டாகாது` என்பர்.
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற் றொருபொருளைத்
தப்பாமல் தன்னுட் பெறானாயின் - செப்பும்
கலையளவே யாகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே யாகுமாம் மூப்பு. -நல்வழி என ஔவையாரும், `மூவாசை நீங்கி மெய்ப்பொருளைப் பெறுதல் முப்பதாண்டிற்குள் உண்டாகவில்லையெனின், பின்னர் உண்டாதல் அரிது` என்றது காண்க.
இங்கு, `முப்பது` என்றது கதிரளவை (சௌரமான) யாண் டேயாம். மதியளவை (சாந்திரமான) யாண்டு கதிரளவை யாண்டிற்குச் சிறிது ஏறக்குறைய நாற்பது நாள்கள் குறைவுடையது. இனிப்பிற கோள் அளவைகள் மிகக் குறைந்தும், கூடியும் நிற்கும். அதனால் கதிர ளவையின் பத்துத் திங்களைப் பல்கோள்களின் பொதுயாண்டாக வைத்து, அவற்றின் பேராட்சி, உள்ளாட்சிகளை (திசா புத்திகளை)க் கணக்கிடுவர். அவ்வாற்றால் பலகோள் யாண்டின் ஒரு வட்டம், `நூற் றிருபதுயாண்டு` எனப்படுகின்றது. எனினும், அது கதிரளவையின் நூற்றியாண்டேயாம். ஆகவே, மக்களின் நிறைவாழ்நாள் `நூற்றியாண்டுக் காலம்` என்றல் இழுக்காதல் இல்லை. இஃது அறியாது இக்காலத்தார் கோள்களின், பேராட்சி உள்ளாட்சியாண்டுகளைக் கதிரளவையாண்டின் வைத்துக் கணக்கிட்டு, நடைமுறைக்குப் பொருந்தாவகை செய்கின்றனர். அது நிற்க.
சிலர், `இங்குக் கூறிய முப்பதிற்றுயாண்டு பல்கோள் யாண்டே; அதனால் அவை கதிரளவையில் இருபத்தைந்துயாண்டே யாகலின், ஒருவனது வாழ்நாள் எல்லையாகிய நூற்றியாண்டினை நாற் கூறிட்டு ஒவ்வொரு கூற்றினும் முறையே மாணி (பிரமசாரி), இல்வாழ் வான் (கிருகத்தன்), நோன்பி (வானப்பிரத்தர்) துறவி (சந்நியாசி) என்னும் நிலைகளை உடையனாதல் வேண்டும். இந்நிலை களில் நான் காம் நிலையிலே பற்றறுதி உளதாகும். இவ்வாறன்றி முதல் நிலைக் கண்ணே பற்றறுதி உடையனாய் நிலைமாணி (நைட்டிக பிரமசாரி) யாகி வீடுபேறு ஒன்றையே விரும்பி நிற்பவனே தலையாய மகனாகலின், அவனது நிலைபற்றியே முப்பது யாண்டு மெய்யுணர்வு பெறுதற்கு எல்லை எனப்பட்டது `எனவும், `அவ்வாறின்றி மேற்கூறிய வாற்றால் இல்வாழ்க்கை முதலிய நிலைகளை மேற்கொண்டு செல்வார்க்கு யாக்கை நிலைநிற்றலும், பற்றறுதலும் ஒருதலையன் மையின், அவற்றை வீடுபேற்றிற்குரிய காலமாக ஆன்றோர் கொண்டிலர்` எனவும் கூறுவர். அவையெல்லாம் ஒக்குமாயினும், முதல் நிலைக்கண்ணே பற்றற்று நிலைமாணிகளாய் நிற்போர் உலகத்து அரியராகலானும், இல்வாழ்க்கைக்குப் பின்னர் நோன்பியாய் இருத்தல் வேண்டும் என்பதும், முப்பதுயாண்டு இல்வாழ்க்கையில் நிற்றல்வேண்டும் என்பதும் பொதுவாகக் கொள்ளப்படுவனவன்றிக் கட்டளையல்ல ஆகலின், பற்றறுதி உண்டாய வழி அறுபதிற்றி யாண்டிலாயினும், அதற்கு முன்னராயினும் முற்றத் துறத்தல் குற்றமன்று ஆகலானும். அறுபதிற்று யாண்டின் பின்னரே நோன்பின ராதல் வழக்கின்கட் காணப்படுதலாலும், `முப்பதுயாண்டு` என் பதனைக் கதிரளவை யாண்டாகக் கொள்ளுதலே பொருந்துவது என்க.
அஃது அவ்வாறாக, சிலர் நூற்றியாண்டின் மேலும் வாழக் காண்கின்றோம் ஆதலின், `மக்கள் வாழ்நாள் எல்லை நூற்றியாண்டு` என்றல் எவ்வாறு பொருந்தும் எனின், அவையெல்லாம் கையிலும், காலிலும் சிலர் ஆறுவிரல், ஏழுவிரல் பெற்றுப் பிறத்தல்போல அரிதிற் காணப்படுவனவாகலின், பொதுமுறைமை ஆகா என்க. இவ் வாற்றால் இத்திருமந்திரம் முப்பதிற்றுயாண்டளவையாகிய இளமையின் சிறப்பை உணர்த்தி, அதற்குள்ளே சிவனது திருவடி உணர்வைப் பெறல்வேண்டும் என வலியுறுத்து முகத்தால், இளமை நிலையாமையைக் கூறியவாறு அறிக.