ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை

பதிகங்கள்

Photo

காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும்அவ் வீசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்க் கின்பஞ்செய் தானே. 

English Meaning:
Think of the Lord Through Time`s Cycles
Day after day we wake to greet the morn,
Day after day we seek the nightly couch;
Even though God, good and great, may frown in wrath,
True devotees ne`er miss great Love`s guarantee.
Tamil Meaning:
நாள்தோறும் காலையில் துயில்விட்டு எழுந்த மக்கள், மீண்டும் நாள்தோறும் மாலையில் துயிலுதலும், இவ்வாறே அவர் தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக் கழிந்து முடிதலும் போதும். (இனியும் இவை நிகழ வேண்டுவது என்னோ!) சிவபெருமான் இவ்வாறு அவர்களை இவ்விரண்டனுட் படுத்துத் துன்புறுத்துகின்ற முனிவினனாயினும், தன்னை மிக நினைத்த பலர்க்கு இன்பத்தைத் தந்துள்ளான்.
Special Remark:
``நித்தலும்`` இரண்டனுள் முன்னதனை முதலிற் கூட்டுக. ``சாலும்`` என்றது, `அதனால் பயனில்லை` என்றவாறு. `இச் சலவியன்` எனச் சுட்டு வருவித்துரைக்க. சலம் - சினம்; அது மறைத்தற் சத்தியாம். ``முற்சினமருவுதிரோதாயி`` என்றார் சிவப்பிரகாசத்தினும் (48). மிக நினைத்தலாவது, இளமைதொட்டே நெடுங்காலமாக நினைத்தல்.
``பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து
பன்னாள் அழைத்தால்
இவன் என்னைப் பன்னாள் அழைப்பொழியான் என்று
எதிர்ப்படுமே`` -தி.4 ப.112 பா.9
என அப்பரும்,
அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல்
என்னாக வையான்தான் எவ்வுலகம் ஈந்தளியான்
பன்னாள் இரந்தாற் பணிந்து. -தி.11அற்புதத் திருவந்தாதி 78
எனக் காரைக்கால் அம்மையாரும் சிவபெருமானைப் பன்னாள் வழிபடுதலை வலியுறுத்து ஓதுதல் காண்க. இதனால், `இளமை நீங்குதற்கு முற்றொட்டே சிவபெருமானை நினைக` என்பது கூறப்பட்டது.