ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை

பதிகங்கள்

Photo

விரும்புவர் முன்னென்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயும்ஒத் தேனே. 

English Meaning:
Youth is Sugar - cane; Age is Nux Vomica
Time was when fond damsels on him their love bestowed;
Like cane`s sugary juice, slow sucked, was to them,
The idol of wenches with budding breasts and jeweled shapes,
But now the sweetest cane has bitter nux vomica become.
Tamil Meaning:
முன்னெல்லாம் என்னை இளமங்கையர் கரும்பைப் பிழிந்து பயனாகக் கொண்ட அதன் சாறுபோலப் பெரிதும் விரும்புவர். இப்பொழுதோ அவர்கட்குக் கரும்புபோல் நின்ற யானே காஞ்சிரங்காய்போல (எட்டிக்காய்போல) நிற்கின்ற நிலையையும் காண்கின்றேன்.
Special Remark:
இது, முதுமை எய்தி, அதனால் நாணமும், துயருங் கொண்டு வருந்துவான் ஒருவனது கூற்றாகச் சொல்லப் பட்டது. இதன் பயன், `இளையராயினார் பலரும் இளமைக்காலத்தே உயிர்க் குறுதியைத் தேடிக்கொள்ளாராயின், பின்னர் இவ்வாறு வருந்துதல் அன்றிப் பிறிதொன்றும் காணார்` என்பது உணர்த்துதல். திருநாவுக்கரசர்,
``தளையவிழ் கோதை நல்லார் தங்களோ டின்பமெய்த
இளையது மல்லேன் எந்தாய், என்செய்வான்தோன்றினேனே ``
-தி.4 ப.78 பா.9
என்று அருளிச்செய்ததும் மேற்காட்டியவாறு, இளமையிலே பயன் பெறாது முதுமையில் துன்புறுதல்கருதி இரங்கியதேயன்றிப் பிறி தில்லை என்பது வெளிப்படை. அங்ஙனமாகவும், `அவரும் மகளிரின் பத்தை இழந்தமையை எண்ணிக் கழிவிரக்கங்கொண்டார்` எனத் தமக்கு வேண்டியவாறே உரைத்து, எரிவாய் நிரயத்தைத் தேடிக்கொள் வாரும் உளர். ``முன்விரும்புவர்`` என்றது இயற்கைக்கண் வந்த கால வழுவமைதி. ``முன்`` என்றதனால், `இது பொழுது` என்பது போந்தது. முடிவில் உளதாதல் பற்றிப் பயனை, ``கடை`` என்றார். `கடையாக` என ஆக்கம் வருவிக்க. `நீர்போல் விரும்புவர்` என மேலே கூட்டி முடிக்க. மூன்றாம் அடி, `அவர்க்கு` என்னும் அளவாய் நின்றது. ``கரும் பொத்து`` என்றது வழிமொழிதல் (அனுவாதம்). அதனால், `அந் நிலையை உடையனாய் இருந்தயானே, இந்நிலையை எய்தினேன்` என்பது பெறப்பட்டது.
இதனால், இன்பச் செருக்கும் இளமையோடே ஒழிதல் கூறப்பட்டது.
காலி னோடு கைகளும் தளர்ந்து காம நோய்தனால்
ஏல வார்கு ழலினா ரிகழ்ந்து ரைப்ப தன்முனம்
மாலி னோடு நான்முகன் மதித்த வர்கள் காண்கிலா
நீல மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்மினே.-தி.2 ப.97 பா.9
எனத் திருஞானசம்பந்தரும், இன்பச் செருக்கு இவ்வாறொழியும் என்று அருளிச்செய்தார். இன்னும் அவர்,
நிலைவெ றுத்தநெஞ்ச மோடு நேசமில் புதல்வர்கள்
முலைவெ றுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனம்
தலைப றித்த கையர் தேரர் தாம்தரிப் பரியவன்
சிலைபிடித் தெயிலெய்தான் திருந்து காழி சேர்மினே.
-தி.2 ப.97 பா.8
என முதுமைக் காலத்தில் புதல்வர், பெயரர் என்பவராலும் வெறுக்கப் படுதலை அருளுதல் காண்க.