ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை

பதிகங்கள்

Photo

பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலங் கடந்தண்டம் ஊடறுத் தானடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே. 

English Meaning:
Time Fleets, So Centre yourself on the Lord
The boy grows to youth, and youth as surely to old age decays,
But time`s changes teach them not that nothing abides;
And so, in ceaseless pursuit, His Sacred Feet, I seek
Him who, transcending this world, beyond the universe presides.
Tamil Meaning:
ஒன்றாய் நின்ற வாழ்க்கைக் காலம், `குழவி, இளமை, முதுமை` என்னும் பருவ வேறுபாட்டால் முத்திறப்பட்டு ஒவ் வொன்றாய் பலவும் கடந்தொழிதலைக் காட்சியிற் கண்டு வைத்தும், உலகர் அவற்றை நினைகின்றிலர். (எனக்கோ அக்காலக் கழிவினால் பேரச்சம் உண்டாகின்றது.) அதனால், நான் இந்நில வுலகையே அன்றி இதற்குமேல் உள்ள அண்டங்கள் பலவற்றையும் ஊடறுத்துக் கடந்து அப்பால் நிற்கின்ற சிவபெருமானது திருவடி என்னைத் தன்கீழ் வைத்திருந்தும், பிறிதொன்றை விரும்பாமல் அதனையே விரும்புவேன்.
Special Remark:
``பாலன்`` முதலிய மூன்றும், அப்பருவத்தையே குறித்து நின்றமை அறிக. தம் செய்தியைக் கூறியது நிலையாமையால் தமக்கு உளதாய அச்சத்தினை உணர்த்து முகத்தான் அறிகிலாதவரது அச்ச மின்மை குறித்தற் பொருட்டாதலின், அது வருவித்துரைக்கப் பட்டது.
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர். -குறள். 1072
எனத் திருவள்ளுவரும் அறிவிலாதாரது யாதும் அறியாநிலையை எடுத்து உள்ளுறையாக இகழ்ந்தோதினார். `அடி, மேல்கிடந்தும்` என உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. `பிறிதொன்றைச் சிறிது விரும்பினும் அது பிறப்பிற்கு ஏதுவாம்` என்பது கருத்து. அதனை, ஆலாலசுந்தரரது வரலாறு நன்கு உணர்த்துதல் காண்க. இதனால், `இளமை நிலையாமை நோக்கிக் கவலாமை அறிவிலாதாரது இயல்பு` என்பது கூறப்பட்டது.