
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்
பதிகங்கள்

பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமு தாகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபட உள்புகச்
சீலம் மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே.
English Meaning:
Sweetness of Satya-Jnana-BlissMilk, honey, juice of fruit
In ambrosial sweetness mixed;
Like it is when the triple States of Turiya—is crossed,
And Jiva enters in Satya-Jnana-Ananda;
It is a sweetness that permeates
Every root of body`s hair.
Tamil Meaning:
முன் தந்திரத்திற் கூறிய முத்துரியத்துள்நிலையிற் புக்கபொழுது, பாலுந்தேனும் கலந்த கலப்பின்கண் உள்ளதும், கனிந்த பழத்தின் சாற்றில் உள்ளதும், மிகத் தூயதாகிய தேவரது அமுதத்தில் உள்ளதுமாகிய இனிமைகள் போன்ற ஓர் இனிமை அவ்வுயிரினது உடம்பில் உள்ள மயிர்க்கால்கள்தோறும் தேங்கி நிற்கும்.
Special Remark:
`பாலொடு தேன் ஆகும் மதுரமும், பழத்துள் இரதம் ஆகும் மதுரமும்` என ``ஆகும் மதுரம்`` என்பதை ஏனையவற்றிற்கும் கூட்டுக. வாலிய - தூய. பேரமுது, தேவர் அமுது, ``துரியம் பொடிபட உள்புக`` என்பதை முதலிற் கூட்டி உரைக்க. பொடிபடல் - விலகுதல். சீலம் - தன்மை, என்றது இங்கு இனிமையை மயிர்க்கால் தோறும் தேக்குதலை.``வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும்
தேக்கிடச் செய்தனன்``*
என்னும் திருவாசகத்தாலும் அறிக.
இதனால், இங்கு எடுத்துக்கொண்ட ஆனந்தத்தின் இயல்பு விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage