ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்

பதிகங்கள்

Photo

பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமு தாகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபட உள்புகச்
சீலம் மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே.

English Meaning:
Sweetness of Satya-Jnana-Bliss

Milk, honey, juice of fruit
In ambrosial sweetness mixed;
Like it is when the triple States of Turiya—is crossed,
And Jiva enters in Satya-Jnana-Ananda;
It is a sweetness that permeates
Every root of body`s hair.
Tamil Meaning:
முன் தந்திரத்திற் கூறிய முத்துரியத்துள்
நிலையிற் புக்கபொழுது, பாலுந்தேனும் கலந்த கலப்பின்கண் உள்ளதும், கனிந்த பழத்தின் சாற்றில் உள்ளதும், மிகத் தூயதாகிய தேவரது அமுதத்தில் உள்ளதுமாகிய இனிமைகள் போன்ற ஓர் இனிமை அவ்வுயிரினது உடம்பில் உள்ள மயிர்க்கால்கள்தோறும் தேங்கி நிற்கும்.
Special Remark:
`பாலொடு தேன் ஆகும் மதுரமும், பழத்துள் இரதம் ஆகும் மதுரமும்` என ``ஆகும் மதுரம்`` என்பதை ஏனையவற்றிற்கும் கூட்டுக. வாலிய - தூய. பேரமுது, தேவர் அமுது, ``துரியம் பொடிபட உள்புக`` என்பதை முதலிற் கூட்டி உரைக்க. பொடிபடல் - விலகுதல். சீலம் - தன்மை, என்றது இங்கு இனிமையை மயிர்க்கால் தோறும் தேக்குதலை.
``வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும்
தேக்கிடச் செய்தனன்``*
என்னும் திருவாசகத்தாலும் அறிக.
இதனால், இங்கு எடுத்துக்கொண்ட ஆனந்தத்தின் இயல்பு விளக்கப்பட்டது.