ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்

பதிகங்கள்

Photo

நினையும் அளவில் நெகிழ வணங்கிப்
புனையில் அவனைப் பொதியலும் ஆகும்
எனையும்எங் கோன்நந்தி தன்னருள் கூட்டி
நினையும் அளவில் நினைப்பித் தனனே.

English Meaning:
Lord is in the Farthest Stretches of Thought

Think of Him as far as your thoughts stretch,
Adore Him in melting love,
Praise Him in songs melodious,
Well may you envelop Him in your heart;
Me too,
My Lord Nandi, His Grace extending,
Led to think of Him
To the farthest reaches of my thought.
Tamil Meaning:
சிவனை அன்பால் நினைதற்குப் பக்குவம் வேண்டும். அது வாய்க்கப் பெற்று, அவனை அன்பினஆல் நினைந்தும், வணங்கியும், புகழ்ந்து பாடியும் நின்றால் ஒன்றிலும் அகப் படாத அவனை நம்முள்ளே அகப்படுத்திக் கொள்ளலாம். எங்கள் ஆசிரியராகிய நந்தி பெருமானும் எனக்கும் பக்குவம் வாய்த்தமையை அறிந்தே தமது அருளை வழங்கிச் சிவனை நினைக்கச் செய்தார்.
Special Remark:
என்றது, `நினைத்து வணங்கவும், புகழ்ந்து பாடவும் செய்தாரா` எனவும், `அதனால், நான் சிவனை இப்பொழுது என்னுள்ளே அகப்படுத்தியுள்ளேன்` எனவும் கூறியவாறு. நெகிழ்வது மனம். வணங்குவது உடம்பு. புனைதல், ``பூமாலை புனைந்து ஏத்துதலையும், புகழ்ந்து பாடுதலையும்``l ஒருங்கே குறித்து நின்றது. புகழ்ந்து பாடுதல், ஆசிரியன்மார் அருளிச் செய்த பாடல்களையும்,தாமே பாடும் பாடல் களையும், அவை அவன் அருள்வழியே அமையும். `நாயனார் இந் நூலால் அவனைப் புகழ்ந்து பாடினார்` என்க,
``ஆர்வல்லார் காண அரனவனை? அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து``3
எனவும்,
``இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
எங்கெழுந் தருளுவ தினியே``1
எனவும்,
``அழலார் வண்ணத் தம்மானை
அன்பில் அணைத்து வைத்தேனே``2
எனவும் இவ்வாறு அருளிச்செய்ப ஆதலின், அவனைப் பொதியலும் ஆகும்`` என்றமை பொருந்துவதாதல் காண்க. உம்மை சிறப்பு. நந்தி பெருமான் தம் அருளை வழங்கியது, நினைவிற்கு எட்டாதவனை நினைக்குமாற்றையும், வணங்குமாற்றையும், பூப்புனையுமாற்றையும், புகழ்ந்து பாடுமாற்றையும் விளக்கியருளியது. `அவர் அவற்றை அருளிச் செய்யாராயின், யான் எதனை அறிவேன்` என்பது கருத்து.
இதனால், `மெய்ப்பொருளை யுணர்தலும், அடைதலும் பக்குவ காலத்தில் குருவருள் வாய்க்கப் பெறுதலாலே` என்பது கூறப்பட்டது.