ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்

பதிகங்கள்

Photo

மன்சத்தி ஆதி மணிஒளி மாசோபை
அன்னதோ டொப்ப மிடல்ஒன்றா மாறது
இன்னியல் உற்பலம் ஒண்சீர் நிறம் மணம்
பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே.

English Meaning:
The Fourth State of Bliss — A Blend of Six
Attributes (Satya—Jnana—Ananda)

Peerless the Bliss that in Satya-Jnana is,
Incomparable is it to the light of pure gem`s rays and the like;
Like Lily, Blue, Purity, Beauty, Colour, Fragrance and Radiance
—These six, together blended, is
That Bliss-State of Satya-Jnana.
Tamil Meaning:
சிவனது சத்தி `பரா சத்தி` என்றும், `ஆதி சத்தி` என்றும் இரண்டாய் இருக்கும். (பராசத்தியே அருட் சத்தியும், ஆதி சத்தியே திரோதான சத்தியும் ஆகும்.) அவையிரண்டும் வேறு வேறல்ல. அஃது எது போல்வது எனின், மணியின்கண் (இரத்தினங் களில்) அதனிடத்தே நின்று அதனையே விளக்கி நிற்பதும், வேறிடத் திலும் சென்று பிற பொருள்களைப் பற்றுவதும் ஆகிய ஒளி செய்கையால் இரண்டாதல் அல்லது பொருளால் இரண்டாகாமை போல்வது. மணியொளி மணியையே விளக்கி நிற்குமிடத்து `பிரகாசம்` என்றும், பிற பொருள்மேல் பாயுமிடத்து `காந்தி` என்றும் சொல்லப்படும். (காந்தியே சோபை) இனி ஆதிசத்தியும் `இச்சை, ஞானம், கிரியை` என மூன்றாம். ஆதி சத்தி இவற்றின் வேறல்ல வாயினும் அதனையும், பரை ஆதியின் வேறல்ல வாயினும் அதனை -யும் வேறு வேறாக வைத்து எண்ணினால், `பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை` எனச் சத்திகள் ஐந்தாகும். அதுவும் எதுபோலும் எனின், குவளை மலரின் குணம் ஒன்றேயாயினும் அதனை, பொலிவு, சிறப்பு, நிறம், மணம்,அழகு` என இவ்வாறு வேறுவேறாக உணர்வது போலும். சத்தி குணமும், சிவன் குணியும் ஆகலின், குணமாகிய சத்தி வேறுபாடு ஐந்தனோடு குணியாகிய சிவம் ஒன்றையும் கூட்டி எண்ண மெய்ப்பொருள் ஆறு கூற்றதாம்.
Special Remark:
மன் சத்தி - நிலையாய் உள்ள சத்தி; மூல சத்தி. அது பரா சத்தி. இது காலத்தைக் கடந்தது. அதனால் அநாதி. இதினின்றும் ஒரு காலத்தில் தோன்றுவது ஆதி. மணியினது `ஒளி, சோபை` என்பவற்றை ``மன் சத்தி, ஆதி`` என்பவற்றோடு நிரல் நிறையாக இயைக்க. ``சத்தி`` என்பதை ஆதிக்கும் கூட்டுக. ஒளியாகிய `அன்னதோடு, சோபையாகிய அன்னதோடு` எனத் தனித் தனி இயைக்க. ``ஒப்ப`` என முற்று. மிடல் - சத்தி ``ஒன்றா மாறாது`` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. `மிடல் ஒன்றாமாறு, உற்பலம் ஒண்மை முதலியன ஆமாறுபோலும்` என முடிக்க. உற்பலம் - குவளை. அது முன்னர் பொருளாகு பெயராய் அதன் மலரையும், பின்னரும் அவ்வாகுபெயராய், அதன் குணத்தையும் குறித்த இருமடியாகுபெயர். ஒண் - ஒண்மை. சீர் - சிறப்பு. அது மலர்களுள் மேலானதாகப் புகழப் படுதற்றன்மை. ``சோபை`` என்பதன்பின், `ஆனவாறு` என்பது எஞ்சி நின்றது. ``ஆறும் ஆனது`` என்னும் உம்மை, `ஒன்றானதேயன்றி` என இறந்தது தழுவிற்று. ``ஆனது`` என்னும் பயனிலைக்கு, `மெய்ப்பொருள்` என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்தியைந்தது.
இதனால், மெய்ப்பொருள் `தானும், தன் சத்தியும்` என இரு கூற்றாகப் பின் சத்தி காரணமாகப் பல கூற்றதாதல் கூறப்பட்டது.