ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்

பதிகங்கள்

Photo

எப்பாழும் பாழாம் யாவுமாய் அன்றாகி
முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே
இப்பாழும் இன்னவா றென்ப திலாஇன்பத்
தற்பரஞா னானந்தத் தான்அது வாகுமே.

English Meaning:
In the Seventh Space is Siva-Knowledge-Bliss

All spaces as space
As all and nothing,
The three Spaces below,
And the three Spaces above,
Seeking them,
And knowing not what this Space is like,
In that Supreme Bliss
Is the Tat-Para Jnanananda;
Siva-Knowledge-Bliss
In that He and I one become.
Tamil Meaning:
(காரியங்கள் ஒடுங்குதற்கு இடமாதல் பற்றிக் காரணங்கள் `பாழ்` எனப்படும். அதனால்,) ``எப்பாழும் பாழாம் யாவுமாய்`` என்றது, எக்காரணங்களும் ஒடுங்குதற்குக் காரணமாய் உள்ள பரம காரணங்கள் எல்லாமாகி` என்றதாம். உலகிற்குக் காரணம் தத்துவங்கள். அவை தோன்றி ஒடுங்குதற்கு இடமான பரம காரணங்கள் சுத்த மாயையும், அசுத்த மாயையும். ஓராற்றால் பிரகிருதி மாயையும் பரம காரணமாகக் கொள்ளப்படும். கலப்பினால் மெய்ப்பொருள் அம்மும்மாயையாகியும் நிற்கும். ஆயினும் மாயைகளின் தன்மே வேறு; மெய்ப்பொருளின் தன்மை வேறு ஆதலின் பொருள் தன்மையால் மெய்ப்பொருள் அம்மாயைகளின் வேறாகியும் நிற்கும்.
Special Remark:
இனி இரண்டாம் அடியிற் கூறப்பட்ட பாழ்கள் பரம காரணத்தைக் குறியாது, அவற்றினின்றும் தோன்றிப் பிறவற்றிற்கும் காரணமாகின்ற இடைநிலைக் காரணங்களாம் தத்துவங்களைக் குறித்தன. மேல் உள்ள மூன்று தத்துவங்களாவன, `இலய தத்துவம், போக தத்துவம், அதிகார தத்துவம்` என்பன. அவை முறையே இரண்டும், ஒன்றும், இரண்டும் ஆக ஐந்தாம் முதல் இரண்டும் சிவம், சத்தி. இடை ஒன்று சாதாக்கியம். இறுதி இரண்டு ஈசுரம், சுத்தவித்தை. கீழ் உள்ள மூன்று தத்துவங்களாவன, `காரண தத்துவம், கஞ்சுக தத்துவம், குணதத்துவம்` என்பன. காரண தத்துவம், மாயா தத்துவம், கஞ்சுக தத்துவம், காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், இவ்வைந்தில் அடங்கும் குண தத்துவம் சித்தம் முதலிய இருபத்து நான்கு. முன்னுதல் - நினைத்தல்; சங்கற்பித்தல். அஃதாவது மும்மாயைகளினின்றும் இம் மூவகைத் தத்துவங்களும், பின் அவற்றின் காரியங்களும் `இவ்விவ்வாறு தோன்றுக` எனவும் `இத்துணைக் காலம் நிலைபெற்றுச் செயலாற்றுக` எனவும், `இனி இப்பொழுது ஒடுங்குக` எனவும் சங்கற் பித்தல். இதனானே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத் தொழில்களும், அவற்றிற்குக் காரணமாம் மறைத்தல் தொழிலும் அவற்றின் காரியமாய் அருளல் தொழிலும் நடைபெறும். ``இப்பாழும்`` என்றதனோடு இயைய இன்னவாறும்` எனவந்த எண்ணும்மை தொகுத் தலாயிற்று. `இங்குக் கூறிய காரணங்களில் ஒன்று` என்றோ, அவையல்ல வாயின் `வேறு இன்ன தன்மையது` என்றோ ஒன்றதனோடு சார்த்திச் சொல்ல ஒண்ணாத இயல்பினது, பொதுவாக, `அது` எனச் சுட்டிச் சொல்லப்படும் மெய்ப் பொருள். ஆயினும் அதனைப் பற்றி உணர் வார்க்கு அது பேரின்பப் பொருளாய், உயிரினது அறிவுக்கு மேலான அறிவாய், ஆனந்தமாய் உள்ளது.
`சத்திய ஞானம்` என்றது, `சத்துச் சித்து` என்றபடி. எனவே, மெய்ப் பொருளின் உண்மை இயல்பு, `சத்துச் சித்து ஆனந்தம்` என்றதாயிற்று. சத்து என்றும் ஒருபடித்தாய்த் திரிபின்றியிருத்தல். சித்து - அறியாமை சிறிதும் இன்றி அறிவேயாய் இருத்தல். ஆகவே, அறிவிக்க. வேண்டாது தானேயறிதலும், ஒரு காலத்து ஓரிடத்து ஒன்றை மட்டும் அறிதல் என்பதின்றி, எக்காலத்தும், எவ்விடத்தும் எல்லாப் பொருளையும் அறியும் அறிவாதலும் தானே பெறப்பட்டது. ஆனந்தம் - துன்பக் கலப்பு இன்மையால் எஞ்ஞான்றும் வரம்பின்றி விளையும் இன்பமாதல். தற்பரம் - தனக்கு (உயிர்கட்கு) மேல், தன், சாதியொருமை. ``தான்`` என்பது தேற்றப்பொருளில் வந்தது.
``அது`` என்பதை முதலில் வைத்து உரைக்க. ``ஆகும்`` என்றது, இயற்கையைச் செயற்கைபோலக் கூறும் இலக்கணையாய் உளதாதலைக் குறித்தது.
`காரணப்பொருள்கள் அனைத்திலும் தான் அவையேயாய்க் கலந்தும், பொருள் தன்மையால் வேறாகியும் நின்று தனது சங்கற்ப மாத்திரையானே ஐந்தொழிலை நடாத்துவதாயினும் மெய்ப்பொருள் பிறிதொரு பொருளோடு சார்த்தி, `இன்ன தன்மையது` எனச் சொல்ல ஒண்ணாத இயல்பினையுடையது. சத்தாய்ச் சித்தாய், ஆனந்தமாய் இருத்தலே அதன் உண்மையியல்பு` என்பது இம்மந்திரத்தின் திரண்டபொருள். பின்பு ``கீழுள முப்பாழ்`` என்றதனால் முற்கூறிய முப்பாழ் `மேல் உள` என்பது பெறப்பட்டது.
``ஒன்றும் குறியே குறியாத லால் அதனுக்கு
ஒன்றும் குறியொன் றிலாமையினால் - ஒன்றோடு
உவமிக்க லாவதுவுந் தான்இல்லை; ஒவ்வாத்
தவமிக்கா ரே இதற்குச் சான்று``8
என்னும் திருக்களிற்றுப்படியாரைக் காண்க.
இதனால், மெய்ப்பொருளின் பொதுவியல்பு சிறப்பியல்புகள் தொகுத்துக் கூறப்பட்டன.
பதிப்புக்களில் இதன்பின் காணப்படும் ``தொம்பதம் தற்பதம்`` என்னும் மந்திரம் முன் தந்திரத்தில் `முத்துரிய` அதிகாரத்தில் வந்தது.