ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்

பதிகங்கள்

Photo

உருஉற் பலம்நிறம் ஒண்மணம் சோபை
தரம்நிற்ப போல்உயிர் தற்பரந் தன்னில்
மருவச் சிவமென்ற மாமுப் பதத்தின்
சொரூபத்தன் சத்தியாதி தோன்ற நின்றானே.

English Meaning:
Satya-Jnana-Bliss is Above the Three States

Like the Blue Lily blossom that is blended
With Color, Purity, Beauty, Fragrance and Radiance,
It is,
When Jiva into Tat-Para blends;
Then is the State of Siva-Manifestness (Svarupa)
That is of the three States exalted,
And in Him arose Satya-Jnana-Ananda.
Tamil Meaning:
மேல் உவமையாகக் கூறிய குவளை மலரின் நிறம், பொலிவு, மணம், அழகு என்பன அம்மலரின் வேறாகாததுபோல உயிர் சிவனிடத்தில் வேற்றுமையின்றி ஒன்று பட்டு நின்றால், `சிவாய` எனவும், `சிவத்துவமசி` எனவும் சொல்லப்படும் மகாவாக்கியங் களின் பொருளாய் உள்ள சிவனது அனந்த சத்தி, அலுத்த சத்தி முதலிய எண்குணங்களும் உயிரினிடத்து விளங்கி நிற்க, உயிர் சிவனாகியே நிற்கும்.
Special Remark:
உரு - அழகு. `உற்பலத்தில்` என ஏழாவது விரிக்க. `தரமாய்` என ஆக்கம் விரிக்க. மருவுதல், அறிந்து நிற்றல். முப்பதங் களில் இரண்டொன்றையே முதற்குறிப்பாகக் கூறி, மகா வாக்கியங் -களை நினைப்பித்தார். சொரூபம், இங்குப் பொருள். சிவனது எண் குணங்களில் இரு குணம் `சத்தி, என்னும் பெயராற் சொல்லப் படுதலின். அவை முதலிய குணங்களைச் ``சத்தியாதி`` என்றார். முன்னர் `உயிர்` என்றதனைப் பின்னர் ``நின்றான்`` என ஆடூவறி சொல்லாற் கூறியது வடமொழி மதம் பற்றி. சிவத்திற்கும், உயிருக்கும் இடையே உள்ள தொடர்பு குணிக்கும், குணத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு போன்றது அன்றாயினும் வேற்றுமையின்றி நிற்றல் மாத்திரைக்கு அத்தொடர்பினை உவமையாகக் கூறினார்.
இதனால், உயிர் ஞானத்தால் மெய்ப்பொருளாகிய சிவமாம் நிலையை எய்துதல் கூறப்பட்டது. அந்நிலையை எய்திய வழி உயிரும் மெய்ப்பொருளாதல் பற்றி இஃது இவ்வதிகாரத்தில் கூறப்பட்டது.