ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு

பதிகங்கள்

Photo

மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறி யேசென்று
புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை
நக்கார்க் கழல்வழி நாடுமின் நீரே.

English Meaning:
Enter Within and Follow Guru`s Way

When the Celestials above consumed ambrosia,
He consumed poison;
Follow the Way of Tapas, the holy men taught,
And enter within;
He will give you Jnana, that is pure gold;
So, Siva`s Feet do seek.
Tamil Meaning:
(பதிப்புக்களில் வருகின்ற அதிகாரத்தில் மூன்றாவதாய்க் காணப்படும் இம்மந்திரம் இங்கிருத்தற்குரியது.)
எழுவகைப் பிறப்புக்களில் மேற்பிறப்பை எய்தினவராகிய தேவர்கள் அமுதுண்ண வேண்டித் தான் அதற்கு முன்னே தோன்றிய விடத்தை உண்டதனானே, `எல்லாரினும் மேலானவன் சிவன்` என்பது இனிது விளங்கும். இன்னும்,
``அப்புறுத்த கடல்நஞ்சம் உண்டான் தன்னை,
அமுதுண்டார் உலந்தாலும் உலவா தானை``*
என்று அருளிச்செய்தபடி, அமுதத்தை உண்டவர் சாவவும், தான் நஞ்சுண்டும் என்றும் ``சாவா மூவாச் சிங்கமாய்`` இருத்தலாலும் அவனது மேன்மை தெளிவாகும். அறிவும், ஆற்றலும் உடையாரினும் அருளுடையாரே மேலானவர் ஆதலாலும், அவ்வருட் பெருக்கம் தன்னையடைந்தார் அமுதுண்ண வேண்டித் தான் நஞ்சத்தை உண்டமையானே தெற்றென விளங்குதலாலும் ``மிக்கார் அமுதுண்ணத் தான் நஞ்சுண்டவன் மேலவன்``* ஆகின்றான். அவனைத் தக்கார் உரைத்த தவநெறியில் சென்று அடைந்தால் அங்ஙனம் அடைந் தவர்களைத் தானாம் வண்ணம் அருளுவான். ஆகையால் அவரது பொன்போலும் மொழியால் விளக்கப்படும் ஞானத்தை `இதுவோ ஞானம்` என இகழ்கின்றவர்களை விட்டு விலகும் உபாயத்தை நீங்கள் ஆராய்ந்து அறிவீர்களாக.
Special Remark:
``பணியின் அமுதம் பருகலும் ஆமே`` என மேற் கூறியதனை அனுபவமாக நிறுவியவாறு. `இம் மேலவனை (பராகாசத் தவனை) இகழ்வாரை நீங்குமாற்றையறிதலே ஞானோதயத்தின் முதல் நிலையாகும் என இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.