ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு

பதிகங்கள்

Photo

நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்(து)
அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி
நணுகிய மின்னொளி சோதி வெளியைப்
பணியின் அமுதம் பருகலும் ஆமே.

English Meaning:
Drink of Ambrosia in Space

Move close to Lord,
He leaves you not;
Move close to world,
He leaves you alone;
He the Supreme Lord Nandi;
Move close to the Flashing Light
Within the (mystic) astral space,
And there adore;
You may drink of Ambrosia Divine.
Tamil Meaning:
சிவன் தன்னைச் சாராமல் உலகத்தைச் சாரின் அவர்களை விட்டு மிகச் சேயனாய் நீங்கி நிற்பன். உலகத்தைச் சாராது தன்னைச் சாரின், அவர்களை விட்டு எப்பொழுதும் நீங்கான். முதற்கண் மின்னல் ஒளி போலத் தோன்றிப் பின்னர்ப் பேரொளியாகி விளங்கு கின்ற பரவெளியாம் அவனை வணங்கினால் அவன் கூறியவாறு நீங்காது நின்று அமுதத்தைப் பொழிவான். அதனை உண்டு தேக்கி மகிழலாம்.
Special Remark:
``சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன்``* என்னும் முறைமையால், `சிவன் பொதுவாகவே யாவர்க்கும் தலைவனாயினும் அவன் சிறப்பாகத் தலைவனாய் நிற்றல் தன்னைச் சார்ந்தவர்க்கே` என்பதை முன்னிரண்டடிகளில் உணர்த்தி `அவனைச் சார்ந்து பயன் பெறுக` எனப் பின் இரண்டடிகளில் அறிவுறுத்துகின்றவ், `அவனைச் சார்தல் பர வெளியிலாம்` என விளக்கினார். `ஒளியும், சோதியும் ஆம் வெளி` என்க. வெளியில் உள்ளவனை ``வெளி`` என்றார். ``நந்தி`` என்பதை முதலில் கூட்டியுரைக்க. அகல்கிலனாகிய நாதன்` என்க. `நாதன், பதி` என்பன பொருட் பின்வரு நிலையணி.
இதனால், `உண்மைச் சிவப்பேறு பர வெளிப்பேறே` என்பதும், அதன் சிறப்பும் கூறப்பட்டது.