ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு

பதிகங்கள்

Photo

ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்(து)
ஏகாச மாசுணம் இட்டங் கிருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்துநின் றப்புறம்
ஆகாச மாய்அங்கி வண்ணனு மாமே.

English Meaning:
He Fills Space and Outer-Space

He fills the space;
He is the darling of Celestials;
He wears the serpent;
Having filled the space
He stands as outer-space
He the Fire-Hued.
Tamil Meaning:
ஐந்து தத்துவங்களாய் நிற்கும் சுத்த மாயை யினையே ஐந்து தலைகளையுடைய பாம்பாக ஆடைபோல் அணிந்து, அந்தத் தத்துவங்களிலே நிற்கின்ற சிவன் அவையாகிய சுத்த மாயை யிடத்தவனாய், `அமரர்` என்னும் பெயருக்கு, முகமனாக அன்றி, உண்மையாகவே உரிய சிவலோகத்தார்க்குத் தலைவனாவான். இன்னும் அவன் அத்தத்துவங்கட்கு அப்பாற்பட்ட பர வெளியில் நிற்றலையே விரும்பி நிற்பினும் இங்குள்ளார் பொருட்டு இப்பூதா காசமாகியும், அதன்கண் விளங்குகின்ற ஒளியாகியும் இருக்கின்றான்.
Special Remark:
ஏகாசம் - மேலாடை; உத்தரீயம். மேலாடையே, ஆடி அசைதல் பற்றி, `ஆடை` எனவும், இடையில் இறுக உடுத்தப்படுவது, `உடை, உடுக்கை` எனவும் சொல்லப்படும். இரண்டாம் அடியை முதலில் கூட்டி உரைக்க. முதற்கண் உள்ள ``ஆகாசம்`` சுத்த மாயை. வண்ணம் - வடிவம். அதிட்டானம் `வடிவம்` எனப்படுதலை, ``சுத்த தத்துவம் சிவன்றன் சுதந்திர வடிவமாகும்``3 என்னும் சிவஞான சித்தியாலும் உணர்க. அமரர் - மரியாதவர்; இறவாதவர். இது தேவர்கட்கு முகமனாகிய பெயரே என்பதை,
``அச்சுதன், அயன், அமரர் ஆகிய பெயர் அவர்க்கு
நிச்சம் படு முகமனே யானபோல்``l
என்னும் கந்த புராணச் செய்யளாலும் அறிக. குலம் - கூட்டம். கொழுந்து தலைவன். இதன்பின் ``அப்புறம்`` என்பதை இயைக்க. ``ஆகாசம்`` மூன்றும் முறையே சுத்தமாயை, பரவெளி, பூதாகாசம் இவற்றைக் குறித்தன. இவையெல்லாம் ஒருங்குதோன்ற அப்பர், ``ஆகாய வண்ணம் உடையாய் போற்றி``9 என்று அருளிச் செய்தார். ``ஆகாச சரீரம் பிரஹ்ம``8 என்பது உபநிடதம். அமர்தல் - விரும்புதல். ``அங்கி`` என்றது ஒளியை. காசம் - ஒளி, அது, `ப்ர` என்னும் இடைச்சொல்லை முதலிற் பெற்று, `ப்ரகாசம்` எனவழங்கும். ஒளிக்கு இடமாதல் பற்றியே, `ஆகாசம்` எனப் பெயர் பெற்றது.
இதனால், ஆகாசங்களது சிறப்புணர்த்தும் முகத்தால் பராகாசத்தினது சிறப்புணர்த்தப்பட்டது.