ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு

பதிகங்கள்

Photo

உள்ளத்துள் ஓம்எனும் ஈசன் ஒருவனை
உள்ளத்து ளேஅங்கி யாய ஒருவனை
உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை
உள்ளத்து ளேஉறல் ஆகாய மாமே.

English Meaning:
How Siva is Within

The Lord is in our heart,
As Aum is He there,
As Fire is He there,
As Order is He there,
As Space in body is He there,
He, the One Being.
Tamil Meaning:
உயிர்களின் அறிவிலே சிவன் `ஓம்` என்னும் பிரணவ வடிவாயும், அதனால் உண்டாக்கப்படுகின்ற உணர்வு வடிவாயும், அவ்வுணர்வில் தோன்றுகின்ற அற வடிவாயும் விளங்குகின்றான். அவனை அங்கு அம்முறையானே சென்று தலைப்படும் இடம் அருள் வெளியேயாம்.
Special Remark:
ஒருவன் - ஒப்பற்றவன். ``அங்கி`` என்றது ஒளியை. அஃது உணர்வேயாம். உணர்வுகள் நாதத்தானே உளவாதல் மேலெல்லாம் சொல்லப்பட்டது. ``நீதி`` என்றது அறத்தை. `அது தானும் அற உணர்வை` என்க. `நாதம், பொருள் உணர்வு, அவற்றுள் அற உணர்வு, திருவருட் பேறு இவை காரண காரியமாய் முறையானே நிகழும்` என்பதும், `அவற்றுள் திருவருட் பேறே முடி நிலை` என்பதும் கூறியவாறு. ஆகவே, `திருக்கூத்தினைக் கண்டு, இம்முறையானே திருவருளைப் பெறுக` என்பது குறிப்பெச்சமாயிற்று. ``உறல்`` என்னும் தொழிற்பெயர் ஆகுபெயராய், உறும் இடத்தைக் குறித்தது. `உடல்` என்பது பாடம் அன்று.
இதனால், ஆகாசப் பேறே முடிநிலைப் பேறாதலும், அதற்குமுன் உள்ள படிநிலைப் பேறுகளும் கூறப்பட்டன.