ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு

பதிகங்கள்

Photo

அறிவுக் கறிவாம் அகண்ட ஒளியும்
பிறியா வலத்தினிற் பேரொளி மூன்றும்
அறியா தடங்கிடில் அத்தன் அடிக்குள்
பிறியா திருக்கிற் பெருங்காலம் ஆமே.

English Meaning:
When Siva`s Light is Reached

The Light Transcendental
Is knowledge beyond knowledge;
When in it merge in silence
In the Lights Three (within) that are mighty,
Then is Siva reached;
If His Feet there you leave not,
Long, long may you be.
Tamil Meaning:
உயிர்களின் அறிவுக்கறிவாய் நிற்கின்ற, `சிவம்` என்னும் ஒளியுடைப் பொருளையும், அதனை விட்டு நீங்காது தாதான்மியமாய் நிற்கும் ஆற்றலாய் எங்கும் பரவி நிற்கும் `இச்சை, ஞானம், கிரியை` என்னும் முச்சுடர்களையும் ஒருவன் தன்னின் வேறாக வைத்துச் சுட்டி உணராமல் அவற்றினுள்ளே அடங்கி ஒன்றாகி, அந்நிலையினின்றும் நீங்காதிருப்பானாயின், அவன் காலத்திற்குக் காலமாய் விளங்குவான்.
Special Remark:
``காலத்தைக் கடந்து நிற்பான்`` என்பதாம். காலத்தைக் கடந்து நிற்றல் கூறவே, இடத்தைக் கடந்து நிற்றலும் தானே பெறப்பட்டது. ``ஒளி`` இரண்டனுள் முன்னது, ஒளியை உடையதனைக் குறித்தது. வலம் - வல்லமை; ஆற்றல், வலத்தினில் - `வல்லமை` என்னும் நிலைமையில் உள்ள. `பெயரொளி` என்பது ``பேரொளி`` என மருவி வந்தது. பெயர்தல் - பரவுதல். `வலத்திற் பெயரொளி மூன்றும்` எனப்பாடம் ஓதுதல் சிறக்கும். `அத்தன் அடிக்குள் அடங்கிடில்` என முன்னே கூட்டுக.
இதனால், `பரவெளி காலத்தைக் கடந்தது` என்பதும், அஃது அதுவேயாய் அடையத்தக்கது` என்பதும் கூறப்பட்டன.