ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை

பதிகங்கள்

Photo

உறுதுணை நந்தியை உம்பர் பிரானைப்
பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின்
செறுதுணை செய்து சிவனடி சிந்தித்(து)
உறுதுணை யாய் அங்கி யாகிநின் றானே.

English Meaning:
God Grants Protection
Nandi is my Protector in need;
He is Lord of Celestials;
Seek His protection;
And ending birth cycle, be redeemed;
Think constant of Siva`s Feet,
He, Divine protection grants,
He, who as Fire stood.
Tamil Meaning:
சிவன், தன்னையே நெருங்கி நிற்கும் துணைவனாக உணர்ந்து, தனது திருவடிகளைச் சிந்தித்தவழிக் கிடைக்கும் துணைவனாயும், ஒளி விளக்காயும் உள்ளான். அவனையன்றிப் பெருந்துணைவரும், பெறத்தக்க துணைவரும் வேறிலர். (ஏனெனில், பேரருளால் உயிர்களின் பிறப்பை அறுப்பவன் அவனேயாகலின்) ஆகையால், உணர்வுடையீர், அதனை உணர்ந்து அவனையே துணையாகப் பற்றிப் பிறப்பையறுத்துப் பிழையுங்கள்.
Special Remark:
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, அதனுள்ளும் ``சிவன்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. செய்தல், இங்குக் கருதுதலைக் குறித்தது. ``உறுதுணை`` இரண்டில் முன்னது உரிச் சொற்றொடர்; பின்னது வினைத்தொகை. அங்கி- தீ. அஃது இங்கு விளக்கைக் குறித்து, அறிவை விளக்குதலைச் சுட்டிற்று. `அறிவுத் துணையே துணையாவதன்றி, உடற்றுணை துணையாகாது என்றபடி.
இதனால், `சிவன் ஒருவனே அறிவுத் துணையாகலானும், உற்றாரை உறுபவன் ஆகலானும் அவனையே துணையாகப் பற்றிப்பத்தி செய்து பயன்பெறல்வேண்டும்` என்பது கூறப்பட்டது.