ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை

பதிகங்கள்

Photo

அடியார் அடியார் அடியார் அடிமைக்(கு)
அடியனாய் நல்கிட்(டு) அடிமையும் பூண்டேன்
அடியார் அருளால் அவனடி கூட்ட
`அடியான் இவன்` என்று அடிமைக்கொண்டானே.

English Meaning:
Be a Devotee of Devotees

To devotees of devotees of Lord
In succession continuous,
I a devotee became;
Giving myself thus,
Into their vassalage I entered;
With the Grace of devotees
I reached His Feet;
Then saying, ``He my devotee is``
He accepted me in His vassalage (of Grace).
Tamil Meaning:
சிவனுக்கு அடியராயினார்க்கு அடியர் ஆயினார் சிலர் அவர்கட்கு அடியராயினார் சிலர். அவர்கட்கு அடியராயினார் மற்றும் சிலர் அவர்கட்கே நான் அடியவன் ஆக என்னைக் கொடுத்து அடியவனாகி, அடிமைகட்குரிய பணிகளைச் செய்வதையே எனது கடமையாகவும் மேற்கொண்டேன். அதனால் என்னை ஆளாக ஏற்றுக் கொண்ட அடியார்கள் என்மேல் கருணை வைத்து அந்தப் பெரு மானுடைய திருவடிகளில் என்னைச் சேர்ப்பிக்க, அப்பெருமானும் என்னைத் `தனக்கே அடியவன்` என்று சொல்லி, நேராகவே என்னை அடிமை கொண்டான்.
Special Remark:
அடியார்க்கு அடியாரைப் பலராகக் கூறியது, `அன்று தொட்டு இன்று காறும் அடியவர் பரம்பரை தொடர்ந்து வருகின்றது` என்பதை உணர்த்தற்கு. `அந்தப் பரம்பரையில் வந்த எந்த அடியவர்க்கு அடிமை பூண்டாலும், அவர்களைச் சிவன் நேரே தன் அடியவராக ஏற்றுக்கொள்வான்` என்பதே இங்கு உணர்த்தப்பட்டது.
``திருப்பா திரிப் புலியூர்
உடையான் அடியார் அடிஅடி யோங்கட்கு
அரியதுண்டே`` -திருமுறை - 4.94-3.
``தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே``3 எனப்போந்த திரு மொழிகளுடன் திருத்தொண்டத்தொகைத் திருப்பதிகத்தையும்l உற்று நோக்குக. ``சீரணி குருசந்தானம்``* என்றதும் இக்கருத்தே பற்றி. முதலடியின் ஈற்றில், ``அடிமை`` என்றதும் `அடிமை` செய்யும் அடியரையே. `நல்கியிட்டு` என்பது குறைந்து நின்றது. `நல்கிட்டு அடியனாய்` என மாற்றுக.
இதனால், அடியார் அடியார், அடியடியார் பத்திகளே சிவபத்தி யாதல் கூறப்பட்டது.
``எனக்கன்பு நின்பொருட்டு எய்தாத தென்கொல்!
வெள் ளேறுடையான்
றனக்கன்பு செய்திருத் தாண்டக வேந்த, இத்
தாரணியில்
நினக்கன்பு செய்கின்ற அப்பூதியைச், சிவ
நேசம்உறும்
இனர்க்கன்பு செய் நம்பி யாரூரன் ஏத்தும்
இயல்பறிந்தே``
-நால்வர் நான்மணி மாலை - 6.
என்னும் சிவப்பிரகாச அடிகள் திருமொழியும் இங்கு உணரத்தக்கது.