ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை

பதிகங்கள்

Photo

ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல
நான்கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை
வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள்
ஊன்கன்றான் நாடிவந் துள்புகுந் தானே.

English Meaning:
Yearn for the Lord

As the calf that searches,
And calls for mother-cow,
I, in yearning, sought and cried for my Lord;
He is Hidden Truth of Vedas
Who beyond heavens eternal stood;
In endearness tender,
He entered into me,
In this body fleshy.
Tamil Meaning:
தாயைப் பிரிந்த பசுக்கன்று தன் தாயை நாடி அழைப்பதுபோல, சிவன் ஆவாய் இருக்க, நான் அவனைப் பிரிந்து வாடும் கன்றாய் இருந்து, என் தலைவனாகிய அவனையே நாடி, `அப்பாவோ! ஐயாவோ!` எனப் பன்முறை அழைத்தேன்; அவன் வானுலகத்திலுள்ள பசுக்கன்றுகள் போலும் தேவர்கட்கெல்லாம் அப்பால் நிற்கும் வேதப்பொருளாயினும் எனது கூக்குரலைச் செவிமடுத்து, உருவம் யாதும் கொள்ளாமலே என்னைத் தேடி வந்து, என் உள்ளத்துள்ளே புகுந்தான்.
Special Remark:
`நான் மகிழ்ந்தேன்` என்பது இசையெச்சம். `ஆனை` என இரண்டன் உருபு விரிக்க. ``கன்றாய்`` என்னும் ஆக்கம் உவமை குறித்து நின்றது. தேவர்கள் பசுவர்க்கத்தினராகலின் `பசு` என்றும், அவர்கள், `தாம் கன்றுகள்` என்பதையும், `சிவன் தாய்ப்பசு` என்பதையும் நினைந்து அவனை அழைத்தல் இன்றிச் சுக போகங்களில் ஆழ்ந்து கிடத்தலால் `அவர்கட்கு அப்பாலாய்` என்றும், `எனினும், மெய்யுணர்வார் அவனை அழைத்தே நிற்பர்` என்றற்கு, ``மறைப் பொருள்`` என்றும் கூறினார். `மறைப்பொருள் ஆமவன்` என்க. ஊன் - உடம்பு கன்றுதல் - விடாது பற்றுதல், `ஊன் கன்றானாய் வந்து புகுந்தான்` என்க. இங்ஙனம் கூறியது, `அவன் புறம் நின்று போதராமல், அகம் நின்ற நிலையையே விளக்கியருளினான்` என்றபடி.
இதனால், `பத்தியுடையார் சிவனை யின்றியமையாது அலமருவர்` என்பதுவும், `அவர்கட்குச் சிவன் நேர்வந்து அருளுவன்` என்பதும் கூறப்பட்டன.
``உடையான் கழற்கு அன்பிலை;
... ... துணையிலி பிணநெஞ்சே!
தேடுகின்றிலை; தெருவுதோ றலறிலை;
செய்வதொன் றறியேனே``*
எனவும்,
`` ... ... வியந்து ஆங்கு அலறித்
தேடிற்றிலேன்; சிவன் எவ்விடத்தான்?
எவர் கண்டனர்? என்று
ஓடிற்றிலேன்; கிடந்து உள்ளுருகேன்;
நின்று உழைத்தனனே``9
எனவும், பிறவாறும் போந்த பத்தித் திருமொழிகளைக் காண்க.
`ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை
நானின் றழைப்பது ஞானங் கருதியே`*
எனத்தொடக்கத்தேயும் இவர் கூறினார்.