ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல்

பதிகங்கள்

Photo

கொதிக்கின்ற வாறும் குளிர்கின்ற வாறும்
பதிக்கின்ற வாறிந்தப் பாரகம் முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்
நொதிக்கின்ற காயத்துள் நூல்ஒன்றல் ஆமே.

English Meaning:
Jnanis are not for Becoming Performing Gods

The Five Gods consign Jiva to broiling miseries,
And then cooling him,
Again consign him to fresh birth;
Thus in the whirl of creation endless they them ordain words;
He severed my desires
For learning limitless;
My body, restless as waves,
He in calmness fixed;
In my purified being within.
Tamil Meaning:
துன்பத்தைக் காய்தலும், இன்பத்தை உவத்தலும் ஆகிய இத்தன்மைகளையே உள்ளத்தில் உறுதியாகக் கொள்ளும் முறைமையையுடையதே இவ்வுலகம் முழுதும், ஆயினும், அந்தத் துன்ப இன்பங்கள் அவற்றிற்குக் காரணமான புலன்களைக் கொணர்ந்து பொருத்துகின்றவர் ஐம்பொறிகளாகிய துட்டரேயாகலின், அவரை உலகம் வெறுத்தொதுக்கி, அழியும் தன்மையுடைய இவ்வுடம்பில் இருந்துகொண்டே சிவநூல்களின் வழி நிற்றலே தக்கது.
Special Remark:
`நிற்பின் அவா முற்றும் அறும்` என்பது குறிப்பெச்சம். பதிக்கின்றவாற்றை உடையதனை, ``பதிக்கின்றவாறு`` என்றார். ``பாரகம்`` என்றதும், `உலகம்` என்றதும் உயிர்களை விதித்தல், இங்கு தப்பாது பொருதுதல். `நொடிகின்ற` என்பது, எதுகை நோக்கி திரிந்து வலிமிகுந்தும் நின்றது. நொடிதல் - அழிதல், அது ``நொடித்தான் மலை``9 என்றமையானே விளங்கும். ``நூல்`` என்றது, இங்கு அதிகாரத்தால் சிவநூலையே குறித்துக் கருவியாகுபெயராய், அதனால் உணர்த்தப்படும் நெறியைக்குறித்தது. அந்நெறியில் சொல்லப்படுவனவற்றுள் பத்தியே தலையானவாதாகையால், ``ஒன்றல்`` என்றது அதனை ஒன்றுதலாகவே கொள்க. சிவ பத்தி மிகின், உலக ஆசை தோன்றாமை அறிக.
இதனால், ஆசையை அறுத்தற்கு உண்மை வழி சிவ பத்தியாதல் கூறிமுடித்து, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது.
[இதற்குப்பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற, ``உய்ந்தனம் என்பீர்; உறுபொருள் காண்கிலீர்`` என்னும் மந்திரம் ஐந்தாம் தந்திரத்தில் `யோகம்` என்னும் அதிகாரத்தில் வந்தது]