ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல்

பதிகங்கள்

Photo

அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படுவழி செய்கின்ற பற்றற வீசி
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
தொடுவது தம்மைத் தொடர்தலும் ஆமே.

English Meaning:
Jnana Way

The five senses burn you up;
They lead you to destruction`s way;
Give up desires and scatter them away;
Reach to the Truth of Jnana;
That the Way to reach Lord.
Tamil Meaning:
கொல்வது போலும் துன்பத்தை ஒருங்குகூடிச் செய்வனவே ஐம்பூதங்கள், அவற்றின்மேல் வைக்கின்ற பற்று மீண்டும் மீண்டும் சிக்குதற்கு வழி செய்வதே. அதனால், அந்தப் பற்றினைப் போக்கி, மீண்டும் அவற்றின்மேல் செல்ல எழுகின்ற ஆசையை எழாமல் தடுப்பதே நிலைத்து நிற்கின்ற ஞானமாகும். அந்தப் பூதங்களை மனத்தால் சிறிது தீண்டுதலும் அவை தொடர்தலுக்கு வழியேயாகும்.
Special Remark:
அடுதல் - கொல்லுதல். இங்கு அதனோடொத்த துன்பத்தைக் குறித்தது, ``கொல்லப் பயன்படும் கீழ்``* என்பதிற்போல் ஐந்து பூதங்களும் துன்பம் செய்தலாவது, அவை உடம்பாகி நின்று, நோய், பசி முதலியவற்றைச் செய்தல், எனவே, ``பற்று`` என்றதும் உடம்பிற் பற்றேயாயிற்று. உடம்பிற் பற்றே வேட்கை பலவற்றிற்கும் காரணம் ஆதலை அறிக. உடன் - ஒன்றுகூடி. உம்மை, இறந்தது தழுவிய எச்சம்.
இதனால், `ஆசைகட்குக் காரணம் உடம்பின்மேல் பற்று` என்பது கூறப்பட்டது.