ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல்

பதிகங்கள்

Photo

உண்மை உணர்ந்துற ஒண்சித்தி முத்தி ஆம்
பெண்மயல் கெட்டறப் பேறட்ட சித்தியாம்
திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
அண்மை அருள்தான் அடைந்தன்பின் ஆறுமே.

English Meaning:
Jnanis Remain Immortal in God-Love

Realizing Truth in full,
Luminous Siddhi and Mukti they attained;
Sex desire enter devoid,
They achieved mighty Siddhis eight;
As Siva Jnani leaves behind this body,
Divine Grace descends on him;
And then in God-Love, forever, he remains.
Tamil Meaning:
பொருளியல்புகளை உள்ளவாறு உணருமாற்றால் பொய்ப் பொருள்களில் ஆசையை அறத்தொலைத்து, மெய்ப் பொருளை உணர்ந்து நிற்றலால் அடையப்படும் வீடு பேறே ஒருவனுக்குச் சிறந்த பேறாகும். அவ்வாறன்றிப் பெண்ணாசையை மட்டும் தொலைத்துப் புகழ், பொருள் முதலியவற்றை அவாவி யோகத்தில் நிற்றலால் பெறும் பேறு அட்டமாசித்திகளாம். (அவை பிறப்பை நீக்காமையால் `பேறு` எனப்படா) மற்று, மேற்கூறியவாறு மெய்யுணர்தலால், ``உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காக்கும்``3 திறம் பெற்ற ஞானி தனுவோடு (உடம்போடு) இருப்பினும் அவனது தனு சிவதனுவேயாகும், பிராரத்தம் முடிந்தபின் அத்தனு நீங்கினால், அவன் சிவனை மிக அணியனாய் அணைதற்குரிய அருளைப் பெற்று அணைவான். அணைந்தபொழுது சிவனிடத்தே அன்பு மீதூர்ந்து அவன் சிவனது இன்பத்திலே அமைதியுடன் திளைத்திருப்பான்.
Special Remark:
சிவ தனுவின் பெருமை திருவுருத்திரத்துள் பின்வருமாறு கூறப்பட்டது.
``மகாருத்திரரே, உலகியலாகிய பிணிக்கு
மருந்தாய் உள்ளதும், உம் அருளைப்பெற்றுள்ள
உருத்திரருடனும் இரண்டறக் கலந்து உயிர்க
ளுக்குத் துன்பத்தை நீக்கி, இன்பத்தைத் தருகின்ற
மருந்தாய் உள்ளது மான உமது, சத்திமய
மான நன்மை மிக்க எந்தத் தனு
(உடம்பு) உண்டோஅந்தத் தனுவினால்
எங்களை நல்வாழ்வு வாழ அருளும்``*
இன்னும் அதனுள் அதுபற்றி,
``உருத்திரரே, (கயிலை) மலையில் வீற்றிருந்து
உலகிற்கு இன்பம் ஊட்டுபவரே,
சாந்தமானதும், நன்மை மிக்கதும்,
வினையற்ற நிலையை (வீட்டினை)
விளக்கி நிற்பதுமாய் எந்தத் தனு
உள்ளதோ அந்த உம்முடைய தனுவால்
எங்களுக்கு உண்மை விளங்கும்படி
அருள்வீராக`` 3
என்றும் கூறப்பட்டது. `சிவ ஞானிதன் தனுவும் இத்தகையதாகிய சிவ தனுவே` என்றற்கு, ``சிவ காயம்`` என்றார். ``உற`` என்பதன் `வரும்` என ஒரு சொல் வருவித்து `வரும் முத்தியே ஒண் சித்தியாம்` என முடிக்க. பெண் மயல் கெடுதல் `நியமம்` என்பதை உணர்த்திப் பின்யோகத்தையும் உணர்த்திற்று. `கெட்டறல்`, ஒருபொருட் பன்மொழி. பேறு - பெறப்படுவது. திண்மையின் ஞானி - திண்மையை (மன உறுதியை) உடைய ஞானி. `அண்மையாய்` என ஆக்கம் வருவிக்க. அடைந்தபின் அன்பு மேன்மேற் பெருக, அதனானே இன்பம் மேன்மேல் எல்லையின்றி விளையும் என்க. ``அன்பே இன்பமாம்`` என்பதை,
``இன்பில் இனிதென்றல் இன்றுண்டேல், இன்றுண்டாம்; அன்பு நிலையே அது``l
என்னும் திருவருட் பயனால் அறிக. அறிந்தாலன்றி அன்பு உண்டாகாது, ஆகவே, ஞானத்தின் பயனே பத்தியாம். இதனைச் சேக்கிழார்
``ஞானம் ஈசன்பால் அன்பே
என்றனர் ஞானம் உண்டார்``
என்று அருளியது காண்க. சில சமயிகள், `ஞானமே முடிநிலையானது` எனக் கூறிப்பத்தியைப் படிநிலையாகக்கொள்வர். அவர்களை,
``வித்தினைத் தேடி முளையைக்கை விட்டவர்
பித்தேறி னார்களென் றுந்தீபற;
பெறுவதங் கென்பெணே உந்தீபற``3
எனவும், அவர்களது சமயங்களையும் சமய நூல்களையும்,
``சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின்(று)
ஆவி யறாதேஎன் றுந்தீபற;
அவ்வுறை கேளாதே உந்தீபற``l
எனவும் திருவுந்தியார் கூறிற்று, இது பற்றி,
``வித்தும் அதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம்
வித்தும அதன் அங்குரமும் மெய்யுணரில் - வித்ததனில்
காணாமை யால் அதனைக் கைவிடுவர்; கண்டவர்கள்
பேணாமை யால் அற்றார் பேறு``9
எனக்கூறிய திருக்களிற்றுப்படியாரையும் நோக்காது`` முளையைக் கைவிட்டவர்`` என்பதற்குப் பிறிதுரை உரைத்தாரும் உளர். சாவி போதலாவது, விளைத்த பயிர் கதிர்விட்டு முற்றியும் நிரம்ப முற்றிப் பயன்படும் அளவிலே அங்ஙனமாகாது காய்ந்து பதராகி விடுதல். ஞானத்தைத் தந்தும், அதன் பயனாகிய அன்பைத் தராதுபோதற்கு இஃது உவமையாயிற்று. இனித் திருக்களிற்றுப்படியாருள், ``காணாமையால் அதனைக் கைவிடுவர்`` என்றது பிற சமயத்தாரைக் கருதியும், `கண்டவர்கள் - பேணாமையால் அற்றார் பேறு`` என்றது சித்தாந்த சைவருள்ளும் நூலறிவு பெற்றும் நுழைவின்றிப் பத்தி செய்யாதாரைக் கருதியும் என்க.
``நாணாமை, நாடாமை, நாரின்மை, யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்``*
என்னும் திருக்குறள் இங்கு நெஞ்சிற்பதிக்கற்பாலது.
``நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக``* என அம்மையார் அருளிச்செய்தார். இவ்வாறான அருமை தோன்றுதற்பொருட்டே ``இறுதியில் அன்பின் ஆறும்`` என்று அருளிச்செய்தார். ஆறும் - அமைதியுறும்.
இதனால், ஞானத்தால் இருவகைப் பற்றும் அற்ற மெய் யுணர்வால் அறுக்கப்படும் அவா அறுதியே சிறந்ததாதல் கூறப்பட்டது.