ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல்

பதிகங்கள்

Photo

மாடத் துளான் அலன் மண்டபத் தான்அலன்
கூடத் துளான்அலன் கோயிலுள் ளான் அலன்
வேடத் துளான்அல்லன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத்து ளேநின்று முத்திதந் தானே.

English Meaning:
Lord is in the Desire—Abnegated

In stony houses and stately halls, He is not;
In parlours deep and temples massive, He is not;
In holy garbs he is not;
In the thoughts of those,
Who have desires abnegated, is He,
Fleshy body, though therein be;
He, their liberation granted.
Tamil Meaning:
சிவன், ஆசையால் மூடப்பட்டுள்ள அந்த மனங் களிலே வெளிப்படாது மறைந்து நின்று, ஆசையற்றவர்களது மனங் களிலே வெளிப்பட்டு விளங்கி, அவர்கட்கு முத்தியைத் தருகின்றான். ஆகையால் அவன், அவனை வைத்து வழிபடுகின்ற மாடம், மண்டபம், கூடம், கோயில், திருவேடம் ஆகிய இவ்விடங்களில் இல்லை.
Special Remark:
மாடம் - இல்லங்களில் சுவர்களில் அமைக்கப்படும் சிறு நிலைகள். அடியார் வேடமும் சிவன் உரையும் இடமாகக் கொள்ளப்படுதல் தெளிவு. `இவ்விடங்களில் சிவன் இல்லை` என்றது, ஆசையுற்ற மனங்களுடன் அவ்விடங்களில் அவனை வழிபடு வார்க்கு. `மூடு அத்துளே நின்று` எனப்பிரித்து, அதனை, வேட்கை விட்டார் நெஞ்சில் முத்தி தந்தான்` என்பதற்கு முன்னே கூட்டி முதற் கண் வைத்து உரைக்க. `அதனுள்` என்பது, `அத்துள்` என மருவிற்று. நின்று - மறைந்து நின்று. `மூடு அத்துளே மறைந்து நின்று` என்றதனால், மூடுதல் இன்றி விளங்கிய நெஞ்சில் வெளிப்பட்டு நிற்றல் பெறப் பட்டது. முன் மந்திரத்து நின்ற `ஈசன்` என்பதே இம்மந்திரத்திற்கு எழு வாயாய் வந்து இயைந்தது.இதனால், `உள்ளத்தில் ஆசை அறா தவர்கள் வெளியில் தனியிடங்களில் சிவனை வைத்து வழிபடுதலால் பயனில்லை, என்பது கூறப்பட்டது.