ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல்

பதிகங்கள்

Photo

`அவன் இவன் ஈசன்` என்(று) அன்புற நாடிச்
`சிவன் இவன் ஈசன் என்(று) உண்மையைஓரார்
பவனிவன் பல்வகை யாம்இப் பிறவிப்
புவன் இவன் போவது பொய்கண்ட போதே.

English Meaning:
Realize the Truth that Jiva is Siva

That this Jiva to become Siva
They in love sought not;
That this Jiva is Siva
That truth they know not;
Knowing not this Jiva is Siva,
They diverse births take,
And into worlds several wander
When Truth they realize not.
Tamil Meaning:
சிவபெருமான் ஒருவனையே முதற் கடவுளாக உணர்தலே, முன் மந்திரத்திற் கூறியவாறு உண்மையை உணர்தலாகும். அவ்வாறின்றி, பிற கடவுளரை, `அவனே கடவுள், இவனே கடவுள்` என உணர்ந்து அன்பு செய்வன எல்லாம் இறையன்புகள் ஆகா; உயிர் அன்புகளே. தான் உண்மையை உணர்ந்துவிட்டதாகக் கருதிய ஒருவன் அதன் பின்னும் வலிய பலவகைப் பிறவிகளாகிய தேரினை ஊர்ந்து, பலவகைப் புவனங்களாகிய வீதிகள்தோறும் பவனி வருதல் அவன் பொய்யை மெய்யாகத் திரிய உணர்ந்த பொழுதேயாம்.
Special Remark:
``அன்புற நாடி`` என்பதை, நாடி அன்புற்று`` என மாற்றிக் கொள்க. `வன் பல்வகையாம் இப்பிறவியில் புவனியில் இவன் பவனி போவது பொய்கண்டபோதே என இயைத்துக்கொள்க. `வன்பிறவி, பல்வகையாம் பிறவி` எனத்தனித்தனி முடிக்க. பிறவியில் உழலுதலைப் பவனியாக உருவகித்து, ஏனையவற்றை உருவகம் செய்யாமை ஏகதேச உருவகம். தொடர் வேறாதலின், ஈற்றடியில் ``இவன்`` என்றது பன்மையொருமை மயக்கம் ஆகாமை யறிக. ``இவன்`` இரண்டில் முன்னது, `சிவனாகிய இவன்` என இருபெயரொட்டாய் அண்மைச் சுட்டுப் பெயர். பின்னது, மேற்கூறிய உணராருள் ஒருவன். `புவனி` என்பதன் ஈற்று இகரம் தொகுத்தலாயிற்று.
இதனால், சிவபத்தியாலன்றிப் பிற தேவர் பத்தியால் பதவி ஆசைகள் நீங்காமை கூறப்பட்டது.