ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி

பதிகங்கள்

Photo

ஆதி பராபரம் ஆகும் பராபரை
சோதி பரம் உயிர் சொல்லும்நல் தத்துவம்
ஓதும் கலை மாயை ஓரிரண்(டு) ஓர்முத்தி
நீதியாம் பேதம்ஒன் பானுடன் ஆதியே.

English Meaning:
Nine Super Tattva Cluster

The Primal Paraparam, Paraparai
Param the Light, Jiva and Tattvas,
The Kala, the Mayas Two and Mukti
These are categories nine
To the Primal One belong.
Tamil Meaning:
எல்லாவற்றிற்கும் மேலான முதற்பொருள் தன்னியல்பில் `சிவம்` என்றும், `சத்தி` என்றும் இரு கூற்றை யுடையதாய் இருக்கும். அவற்றுள் சத்தி தனது ஒரு சிறு கூற்றில் `ஆதி` என்னும் பெயருடையதாய் நின்று, `அறிவு அருள், உயிர், தத்துவங்கள் வேதம் முதலிய நூல்கள், பஞ்சகலைகள், சுத்தமாயை, அசுத்த மாயை, பல சமயத்தாரும், ஆராய்ந்து கூறும் முத்திநிலைகள்` என்னும் ஒன்பது வகையாய் நிற்கும்.
Special Remark:
இவற்றுள் அறிவே ஞானம். அருளே இச்சை, இவை இரண்டும் தன்னால் தான் அடையும் பேதங்கள். ஏனைய ஆறும் தான் அவையேயாய்க் கலந்து நிற்கும் கலப்பினால் அடையும் பேதங்கள். அங்ஙனம் கலந்து நின்று அவற்றை இயக்குதலே கிரியை ஆதலின் அதனை வேறு கூற வேண்டாவாயிற்று.
``ஆதி`` இரண்டனுள் முதலது `முதற்பொருள்` என்னும் பொருட்டு. ஈற்றது ஆதி சத்தி. இதுவே `திரோதான சத்தி` எனப்படும். `பராற் பரம், பராற் பரை` என்பன `பராபரம், பராபரை` என மருவி வழங்கும். `மேலானவற்றிற்கும் மேலானது, மேலானவற்றிற்கும் மேலானவன்` என்பன இவற்றின் பொருள், `பராபரம்` என அஃறிணையாற் கூறியது. `சிவம்` எனக் கூறியவவாறு. தன்னிலையில் சிவம் `பரமசிவம்` என்றும், அதனது சத்தி `பராசத்தி` என்றும் சொல்லப்படும். அது வாளா இருப்பதன்றி, யாதொன்றையும் செய்வதன்று. செய்ய நினைக்குங்கால், ஒரு சிறு கூற்றானே `ஆதி சத்தி` என வேறு நின்றே செய்யும். அதனால், பேதங்கள் எல்லாவற்றிலும் ஆதி சத்தி உடனாய் நிற்கும் என்க.
ஆதி சத்தி `ஞானம்` என்னும் வகையில் அனைத்துயிர்களின் அறிவிலும் அறிவிற்கு அறிவாய் நின்று அவ்வறிவுப் பொருள்களை அறியச்செய்யும் `கிரியை` என்னும் வகையில் உயிர்களையும், உயிரல் பொருள்களையும் இயக்கி நிற்கும் இவற்றிற்கெல்லாம் காரணம் தான் அருள்வடிவாய் இருத்தலே.
``கலை`` என்பதனை இரட்டுற மொழிந்து கொள்க. ``தத்துவவம்`` என்றது பொருட் பிரபஞ்சத்தையாகலின். சொற் பிரபஞ்சம் எஞ்சாமைப் பொருட்டு அதனை வேறு கூறினார். பஞ்ச கலைகளும் இரு மாயைகளுள் சுத்த மாயா காரியமேனும் அவை தத்துவங்களின் வேறாய் அனைத்தையும் தம்முள் அடக்கி நிற்றல்பற்றி வேறு கூறப்பட்டன. காரியங்களை முன்னர்க் கூறிக் காரணங்களை முடிவிற் கூறினார். ஓர் முத்தி, வினைத்தொகை. சித்தாந்த முத்தி அருட்சத்தியால் ஆவது ஆகலின், பிற சமயத்தார் கூறும் முத்திகளே திரோதான சத்தியால் ஆவன என்க.
`ஒன்பானுடனும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `ஒன்பானுடனும் ஆதி ஆம்` என முடிக்க.
ஒன்பது பேதங்களையும் ``நீதியாம் பேதம்`` என்றது, `உயிர்கள் பக்குவத்தை யடைதற்கு, இவை இன்றியமையாத முறைகளாம்` என்றற்கு.
இதனால், `ஒருவனாகிய சிவன் தனது ஆதி சத்தியால் பல பேதங்களை அடைந்து நிற்றலால், நவாவத்தை அபிமானியும் ஆகின்றான்` என்பது குறிப்பால் விளக்கப்பட்டது.