ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி

பதிகங்கள்

Photo

முன்சொன்ன ஒன்பானின் முன்னுறு தத்துவம்
தன்சொல்லின் எண்ணத் தகாஒன்பான் வேறுள
பின்சொல்ல லாகும்இவ் வீரொன்பான் பேர்த்திட்டுத்
தன் செய்த ஆண்டவன் தான்சிறந் தானே.

English Meaning:
Nine Avasta Cluster Beyond

Beyond the nine states aforesaid
Are nine that defy thought;
Of these shall be said in detail below;
Great indeed is the Lord
Who these twice-nine States made.
Tamil Meaning:
இவ்வதிகாரத்து முதற்கண் சொல்லப்பட்ட ஒன்பது அவத்தைகளைப் போல அவற்றுக்கு முன்னே சீவன் தன் சொல்லால் சொல்லி எண்ணக் கூடாத ஒன்பது நிலைகள் உள்ளன. ஆகவே, அனைத்தையும் தொகுத்து நோக்கும்பொழுது பதினெட்டாகின்ற இவைகளினின்றும் சீவர்களைப் பிரித்துத் தானாகச் செய்துவரும் தலைவனாகிய சிவன் முத்தி நிலையில் தான் ஒருவனேயாகி விளங்கி நிற்கின்றான்.
Special Remark:
இங்கு, ``தத்துவம்`` என்றதைச் சித்தாந்த முறையில் சிறப்பாகவும், பிற மதங்கள் கூறும் முறையில் பொதுவாகவும் கொள்க. அங்ஙனம் கொள்ளவே, மாயாகாரியங்களோடு `சிவன்` சிவன், பரன், என்பனவும் தத்துவங்களாம். ஆனபின், ``தத்துவம்`` என்றது ஆகுபெயராய் அவை பற்றி நிகழும் அவத்தைகளைக் குறிக்கும். ஆகவே, இவ்வதிகாரத் தொடக்கத்தில் சொல்லப்பட்ட சீவன் முதலிய மூன்று பற்றிய ஒன்பது அவத்தைகளுடன், மாயா காரியங்களில் உணர்வுக் கருவிகளாகிய ஞானேந்திரியம் ஐந்து, அந்தக் கரணம் நான்கு ஆகிய ஒன்பது கருவிகளால் நிகழும் உணர்வு நிலைகளாகிய ஒன்பது அவத்தைகள் உளவாக, அனைத்தும் ``ஈரொன்பான்`` ஆகும். `இந்நிலைகள் அனைத்தையும் நீக்கிச் சீவனைத் தன்னைப் போலவே என்றும் ஒரு நிலையில் நிற்கச் செய்து சிவன் தான் மட்டுமே விளங்கி நிற்கின்றான். இதுவே உண்மை நிலையாகிய சொரூபநிலை` என்றபடி. `பர துரியத்தையும் பேர்கின்றான்` என்றது, அபர முத்தியினின்றும் நீக்குதலை நோக்கி. ``ஒன்பானின்`` என்பதில் இன் உவம உருபு. `மாயா காரியங்கள்` என்பது விளங்குதற் பொருட்டு. ``எண்ணத்தகா`` என்றார். ``பின்`` என்று. `முடிவில்` என்றபடி. `தன்போலச் செய்த` என உவம உருபு விரிக்க. `தற்செய்த` எனற்பாலது, எதுகை நோக்கி மெலிந்து நின்றது. ``செய்த`` என இறந்த காலத்தாற் கூறினமையின் பண்டு தொட்டுச் செய்து வருதல் விளங்கிற்று. `தானே சிறந்தான்` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று.
இதனால், அவத்தைகள் பலவற்றாலும் உயிரைச் சிவன் உய்வித்தல் கூறப்பட்டது.