ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி

பதிகங்கள்

Photo

நவமாம் அவத்தை நனவாதி பற்றின்
பவமாம் மலம் குணம் பற்றற்றுப் பற்றாத்
தவமான சத்திய ஞானப் பொதுவில்
துவம் ஆர் துரியம் சொரூபம் தாமே.

English Meaning:
Beyond Ninth State

As nine states beginning with Jagrat are experienced,
Attachment to Malas and Gunas,
That emanate birth, vanish;
In Transcendental Turiya State
Then Void (Satya-Jnana-Podu) succeeds,
Truth and Jnana filled
Where Jiva and Siva one are;
In Turiyas rest
Jiva and Siva are two,
That now in Void is one Manifestness (Svarupa).
Tamil Meaning:
மேற்கூறிய முக்கூற்று ஒன்பான் அவத்தைகளில் முதற்கூறாகிய `சீவ அவத்தை` எனப்படும் யோகாவத்தையில் நிற்பினும் பிறப்பு உண்டாகவே செய்யும். அதனால் குரு உபதேசத்தின் வழியாகச் சிவ அவத்தை ஆகிய நின்மலாவத்தையை அடைந்து, `யான், எனது` என்னும் பற்றுக்களை விடுத்து, அப்பற்றுக்கள் சிறிதும் இல்லாத சிவயோகமாகிய உண்மை ஞான வெளியில் நீ அதுவாகி அடங்கி நில். அந்நிலையே சிவ துரியமாகும். அதன்பின் துரியாதீத நிலை எளிதில் கைவர, பரம சிவனை அடையும் உண்மை நிலை உண்டாகும்.
Special Remark:
விதந்தோதாது பொதுப்பட ஓதியதனால் ``நனவாதி`` என்றது முதற்கண் நிகழும் சீவ அவத்தையைக் குறித்தது. `பற்றினும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. மலம் - ஆணவம். அதன் காரியமே யான்` என்னும் செருக்கு. குணம் - மாயை. அதன் காரியங்களே `எனது` என்னும் செருக்கிற்கு நிமித்தம். `இவற்றால் வரும் பற்று` என்க. `அந்தப்பற்றுக்கள் வந்து பற்றாத தவம்` என்றதனால் அது சிவ யோகமாயிற்று. அந்நிலை அருள்நிலையே யாகலின் அது, ``சத்திய ஞானப் பொது`` எனப்பட்டது. துவம் - தன்மை. ஆர் - பொருந்து. ``ஆம்`` என்பதை முன்னரும் கூட்டி, `அதுவே துரியம் ஆம்; பின்பு சொரூபம் ஆம்` என முடிக்க.
இதனால், மேற்கூறிய அபிமானப்பெயர்கள் ஒன்பதில் இதயனிலும் மேலான, `பிரசாபதி, சாந்தன்` என்னும் பெயர்களைப் பெற முயல்வதே சிறப்பு என்பது கூறப்பட்டது.