ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி

பதிகங்கள்

Photo

உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம்
பகர்ந்த பிரான் என்னும் பண்பினை நாடி
அகைந்தெம்பி ரான்என்பன் அல்லும் பகலும்
இகந்தன வல்வினை ஈடறுத் தானே.

English Meaning:
Lord Spoke of Nine States

The nine states from the five (states of Jiva) evolved
Of the Lord spoke
And world rejoiced;
``My Lord, My Lord``—
Thus I prayed day and night;
And He severed my fetters strong.
Tamil Meaning:
`உயிர்களின் பொருட்டு அவற்றிற்கு ஏற்புடைய வித்தை பதினான்கையும் செய்தருளிய முதல்வன்` என்று உயர்ந்தோர் யாவராலும் சொல்லப்படுகின்ற அத்தன்மையை உணர்ந்து நான் சிவனை ஏனைத் தேவரினின்றும் வேறு பிரித்து, `அவனே எங்கள் கடவுள்` என்று இரவும், பகலும் ஓயாது சொல்லிக் கொண்டிருப்பேன். அதனால், வரும் பிறப்புக்களில் என்னை வந்து பற்ற நின்ற வலிய வினைகள் இல்லாதொழிந்தன. மற்றும் இப்பொழுது தோன்றும் வினைகளையும் அவன் அழித்துவிட்டான்.
Special Remark:
`அதனால் இனி எனக்குப் பிறவி இல்லை`, இசையெச்சம். ``உலகம்`` என்பதை முதலிற் கொள்க. வித்தை பதினெட்டாயினும் அவற்றுள் உபவேதம் நான்கை நீக்கி, `பதினான்கு` என்றலும் வழக்கு வித்தை பதினெட்டாவன, வேதம் நான்கு, உபவேதம் நான்கு, அங்கம் ஆறு, உபாங்கம் நான்கு.
``அட்டாதச வித்தைக்கும் சூலபாணியே
கர்த்தா என்று சுருதி கூறுகின்றது``
என்பது வாயு சங்கிதையில் சொல்லப்படுவது*
``ஈசாநஸ் ஸர்வ வித்யாநாம்``
என்பது மகாநாராயணோப நிடதம்.
அகைத்தல் - பிரித்தல். `அகைத்து` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது. ஈடு - முன் இடுதல். அது முன்பு, ``வல்வினை`` என்றதனால், முன் இடப்படுவதாகிய வினையையே குறித்தது.
இதனால், `அபிமானப் பெயர்கள் ஒன்பதனாலும் குறிக்கப்படுமாறு ஒன்பது அவத்தைகளிலும் விளங்குபவன் சிவனே` என உணர்ந்தவழியே பிறப்பு நீங்குதல் குறிப்பால் உணர்த்தப்பட்டது.