ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்

பதிகங்கள்

Photo

சிந்தையி னுள்ளுள(து) எந்தை திருவடி
சிந்தையும் எந்தை திருவடிக் கீழது
எந்தையும் என்னை அறியகி லா னாயின்
எந்தையை யானும் அறியகி லேனே.

English Meaning:
Only by God`s Grace Jiva Can Know Him

Within my thoughts
Are my Father`s Holy Feet;
At my Father`s Holy Feet;
Are my thoughts centred
If my Father Knows me not,
Neither will I my father know.
Tamil Meaning:
(முன் மந்திரத்தில் சொல்லியவாறு சிவனது திருவடி -யினை எனது தலைமேல் மட்டும் உள்ளதன்று எனது சித்தத்தி னுள்ளேயும் உள்ளது. இனி எனது சித்தத்தை உள்ளடக்கி, வெளியி -லேயும் உள்ளது. (இந்நிலை, அவன்தானே இரங்கி எனக்குச் செய்த அருட்செயலாகும். ஏனெனில்,) முதற் கண் அவன் என்னை நினையாதிருப்பின், நான் அவனை நினைப்பதற்கே வழியில்லை.
Special Remark:
அந்தக்கரணம் நான்கனுள் சித்தம் ஒன்றை மீள மீள இடைவிடாது நினைந்து நினைந்து நிற்றலால்தான் ஆன்மா அப்பொருளில் அழுந்தி நின்று அதனை அனுபவிக்கின்றது. அது பற்றியே, ``திருவடி சிந்தையினுள்ளே`` என்றார்.
``சிந்திப் பரியன;சிந்திப் பவர்க்குச் சிறந்து செந்தேன்
முந்திப் பொழிவன ... ... ஐயாறன் அடித்தலமே``3
``அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே யாக``*
என அருளிச் செய்தன காண்க.
``என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்;
தன்னை நானும்முன் ஏதும் அறிந்திலேன்;
என்னைத் தன்அடி யான்என் றறிதலும்,
தன்னை நானும் பிரான்என்றறிந்தேனே``l
எனவும்,
``எந்த மாதவம் செய்தானை நெஞ்சமே,
பந்தம் வீடவை யாய பராபரன்,
அந்தம் இல்புகழ் ஆரூர் அரனெறி
சிந்தை யுள்ளும், சிரத்துளும் தங்கவே``8
எனவும் போந்த அப்பர்திருமொழிகளை இங்கு உடன்வைத்துக் காண்க.
இதனால், முன் மந்திரத்திற் கூறப்பட்ட திருவடிப் பேற்றின் நிலை மேலும் வகுத்துக் கூறப்பட்டது.