ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்

பதிகங்கள்

Photo

நின்றான் நிலமுழு(து) அண்டமும் மேல்உற
வன்றாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின்றான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
தன்றா ளிணைஎன் தலைமிசை யானதே.

English Meaning:
Greatness of Feet

He stood, heaven and earth encompassing,
That the mighty Asuras and Devas
May redemption know;
He who created this world
Is the Great Nandi;
His Feet, on my head, I bore.
Tamil Meaning:
`அடி தலை அறியும் திறம்` என்பது, `இறைவனது அடி தலைகளை அறிதல்` எனவும் பொருள் தரும். அம்முறையில் பார்க்கும்பொழுது, `அவனது அடி தலைகள் உயிர்களால் அறிய இயலாதவை` என்று அறிதலே மெய்யறிவாகும் அந்த உண்மையை அறிவிக்கவே அவன் மாலும், அயனும் போர் செய்தபொழுது அப்போரினால் மிக்க வலிமையையுடைய அசுரரும் - தேவருங்கூட அழியாது வாழ்தற்பொருட்டுத் தனது திருவடிகள் நிலம் முழுதும் கடந்து கீழாகவும், முடி அண்டங்களை யெல்லாம் கடந்து அவற்றிற்கு மேலாகவும் இருக்கும்படி நெடியதோர் உருவத்தோடு அவர்கட்கு இடையே தோன்றி நின்றான். (அவர்கள் அவனது அடியையும், முடியையும் தேடிக் காணாது இளைத்தனர். அங்ஙனமாகவே) உலகம் முழுவதையும் படைத்தல் முதலிய ஐந்தொழிலைச் செய்யும் முதல்வன் அவனே ஆகின்றான். அவன் `நந்தி` என்பதைத் தனது பெயராக உடையவன். அவனது திருவடியிணை தான் தலைமேல் உள்ளது.
Special Remark:
`அஃது அவனே இரங்கி வந்து எனக்கு அருளியது` என்பது குறிப்பு. இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, `நின்றான்` என்பதை முதலடியின் இறுதியில் வைத்து உரைக்க. `முழுதும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ``அண்டமும்`` என்பதன்பின் எஞ்சி நின்ற `கீழ்` என்பதை வருவித்து நிரல்நிறையாக்குக. `பின்` என்பது தெளிவுப் பொருட்கண் வந்தது, `நீயிர் பொய் கூறியபின், மெய் கூறுவார் யாவர்` என்பதிற் போல. ``தான்`` என்பதில் பிரிநிலை ஏகாரம் விரித்து, `உலகம் படைத்தவன் தானே` என்க. ``படைத்தவன்`` என்றது உபலக்கணம்.
இதனால், `அடிதலை அறிதலை இறைவனிடம் வைத்து நோக்குங்கால் - அவை நம்மால் அறிய இயலாதன - என அறிதல் வேண்டும்` என்பதும், `அறிந்து அவனது அடியை அடைய முயல வேண்டும்` என்பதும் கூறப்பட்டன.
``நிலமுதற்கீழ் அண்டம்உற நின்றிலனேல் இருவரும்தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ``3
என்றதும், `அவன் அவ்வாறு நின்றிராவிடில் உலகம் அழிந்திருக்கும்` என்பதையே குறித்தது.
``பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்;
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே`` 8
``கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால் ;
சோதி மணிமுடிசொல்லில், சொல்லிறந்து நின்ற தொன்மை``*