ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை

பதிகங்கள்

Photo

தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
ஆழ்வினை ஆழ அவர்க்கே அறம்செய்யும்
ஆழ்வினை நீக்கி அருவினை தன்னோடு
போழ்வினை தீர்க்கும்அப் பொன்னுல காமே.

English Meaning:
Give to the Great Holy Ones and Reach the Golden Land

Depressed are they not;
In holy Tapas they persevere still;
To them give
Your Karmas away to hasten;
You shall that Golden Land reach,
Where Karmas three, past, present and future, exist none.
Tamil Meaning:
உலகீர், பின்னும், பின்னும் நீர் மிக அழுந்த வருகின்ற எதிர் வினைகள் தோன்றாமல் ஆழ்ந்தே போகும்படி, பாசக் கட்டாகிய இழிநிலையினின்றும் நீங்கி உயர்நிலையை எய்தினா ராயினும், மீட்டும் அந்த இழிநிலையில் பாசங்கள் வந்து வீழ்த்தாதபடி முன்பு செய்துபோந்த அந்தச் சரியை முதலிய அரிய தவங்களைப் பின்னும் மாகேசுரர் விடாது செய்வர். அத்தகையோர்க்கே நீவிர் தானத்தையும், தருமத்தையும் செய்யுங்கள். அவ்வாறு செய்தால் அச்செயல்கள் உங்களுடைய எதிர்வினை, பழவினை, பயன்வினை என்னும் மூவகை வினைகளையும் அறவே அழிக்கும். அவ்வினைகள் அழியவே, மீளப் பந்த உலகில் வரும் பிறப்பு இன்றி, வீட்டுலகமே கிடைப்பதாகும்.
Special Remark:
எதிர் வினை - ஆகாமியம். ``ஆழ்ந்தவினை`` - எதிர் கால வினைத்தொகை. பழவினை - சஞ்சிதம். அதனை அழித்தல் அரிது ஆதலின் ``அருவினை`` என்றார். போழ்தல் - இப்பொழுது வந்து தாக்குதல். அங்ஙனம் தாக்கும் வினை பிராரத்தமாம். ``பொன்னுலகம்`` என்றது `உயர்நிலை` என்னும் அளவாய் நின்றது. ``ஆழ்வினை ஆழ`` என்பதை முதலிற் கூட்டியுரைக்க.
இதனால், மாகேசுர பூசை வீடு பயத்தல் கூறி முடிக்கப்பட்டது.