ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை

பதிகங்கள்

Photo

படமாடக் கோயிற் பகவற்கொன் றீயின்
நடமாடக் கோயில் நம்பற்கங் காகா
நடமாடக் கோயில் நம்பற்கொன் றீயின்
படமாடக் கோயிற் பகவற்க தாமே.

English Meaning:
Devotees are Walking Temples

The offering you give
To the Lord in the temple steepled high
Reaches not His devotees
Who the walking temples noble are;
When you offer things
To the walking temples noble,
That sure reaches the Lord
In the temple steepled high.
Tamil Meaning:
கொடித் துகில் ஆடுகின்ற இயங்காக் கோயிலினுள் எழுந்தருளியிருக்கும் சிவனுக்கு ஒரு பொருளை ஏற்பித்தால் அஃது எங்கும் இயங்குகின்ற உடம்பாகிய கோயிலினுள் எழுந்தருளி யிருக்கின்ற சிவனுக்குச் சேரமாட்டாது; அங்கேயே இருந்துவிடும். ஆனால், எங்கும் இயங்கும் உடம்பாகிய கோயிலினுள் எழுந்தருளி யிருக்கும் சிவனுக்கு ஒரு பொருளை ஏற்பித்தால் அஃது அந்தச் சிவனுக்கு ஆதலுடன், கொடித்துகில் ஆடுகின்ற இயங்காக் கோயிலினுள் எழுந்தருளியிருக்கின்ற சிவனுக்கும் போய்ச் சேர்வதாகும்.
Special Remark:
`ஆகவே, இருவரையும் வழிபடல் வேண்டுமாயினும், இயங்கும் கோயிலினுள் இருக்கும் சிவனை வழிபடுதல் தவிரத் தக்கதன்று` என்றபடி.
படம் - சீலை. ``ஆடும்`` என்றதனால், அது கொடிச் சீலையைக் குறித்தது. ``கட்டடமாக மக்களால் அமைக்கப்பட்ட கோயில்` என்பதை விளக்க. ``படம் ஆடு அக்கோயில்`` எனவும், ``உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம்`` என்றபடி, ``உடம்பாகிய கோயில்`` என்பதை விளக்க. ``நடமாடு அக்கோயில்`` எனவும் கூறினார். நடமாடுதல் - உலாவுதல். நடம் ஆடுதல்` என்பது, `நடனம் ஆடுதல்` எனப் பொருள்தருமாயினும் உலகவழக்கில் `உலாவுதல்` என்னும் அளவாய் நிற்றலின் அஃதேபற்றி ``நடமாடும் அக்கோயில்`` என்றார்.
`திருக்கோயிலினுள் இருக்கும் திருமேனிகள் மந்திர சாந்நியத் தால் சிவனேயாய் விளங்குதல் போல, அடியார்களது ஆன்ம சைதன் னியமும் ஆழ்நிலைத் தியான சமாதிகளாலும், அருள்ஞான உணர் வாலும் சிவனேயாம் ஆதலின், இடவேறுபாடு பற்றி வேற்றுமை யில்லை` என்றற்கு இரண்டினையும், ``பகவன், நம்பன்`` என்றே குறித் தருளினார். இதனால் `மாகேசுரர் மகேசுரனே` என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு. ``ஒன்று`` என்றது, `எடுத்துக்காட்டிற்கு ஒன்று` என்றவாறு.
இதனால், `இலிங்க பூசை இயலாதாயினும் சங்கமபூசை ஒழியாது செய்யத்தக்கது` என்பது கூறப்பட்டது.