ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை

பதிகங்கள்

Photo

அழிதக வில்லா அரன்அடி யாரைத்
தொழுதகை ஞாலத்துத் தூங்கிருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
தொழுதெழ வையகத் தோரின்ப மாமே.

English Meaning:
Worship Siva`s Devotee and the World will Rejoice

In this world worship
Siva`s devotees, who no death know;
The hanging darkness of ignorance forever disappears,
Unfailing seek the devotee pure
And your obeisance make;
Of a certain will the world rejoice.
Tamil Meaning:
இறைமைக் குணங்களையுடைய சிவபெரு மானை விரும்பி அவனை நாள்தோறும் தொழுது துயிலெழுதலை மட்டும் செய்தால், இவ்வுலகத்தில் உலகின்பத்தோடு சிறிது இறையின்பமும் உண்டாகும். ஆனால், தம் நிலையில் கெடுதல் இல்லாத மாகேசுரரை வழிபடுதலால், இவ்வுலகத்தில் நீங்குதற்கரிய அஞ்ஞானம் நீங்கி இறையின்பமே மிகக் கிடைக்கும்.
Special Remark:
எனவே, `மாகேசுர பூசையைப் புறக்கணிப்பார் செய்யும் மகேசுர பூசையும் சிறிதளவே பயன் தரும்` என்பதாம். ``அடியவர்க்கன் பில்லார் ஈசனுக்கன் பில்லார்`` (சிவஞான சித்தயார், சூ.12-2) என்றார் அருணந்தி தேவரும். மாகேசுரபூசை செய்யாத வழி மகேசுர பூசை நிரம்பாமை நோக்கியன்றோ பெரியார் பலரும் அடியார்க்கடிமை செய்தலை ஆண்டவனை வேண்டியும் பெற்றனர். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. `தொழுதைகையால்` என உருபு விரிக்க. பழுதுபடாமைக்கு `நாள்` என்னும் வினைமுதல் வருவிக்க.
இதனால், `எத்தகையோர்க்கும் மாகேசுர பூசை இன்றியமையாதது` என்பது கூறப்பட்டது.