ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை

பதிகங்கள்

Photo

ஏறுடை யாய்இறை வாஎம் பிரான்என்று
நீறிடு வார்அடியார் நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை யண்ணல் இவரென்று
வேறணி வார்க்கு வினையில்லை தானே.
அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள்
ஒத்தமெய்ஞ் ஞானத் துயர்ந்தார் பதத்தைச்
சுத்தம தாக விளங்கித் தெளிக்கவே
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.

English Meaning:
Siva Jnanis are Gods on Earth

``You, the Divine Bull ride,
My Lord, My God``
—Those who wear the holy ashes saying thus;
Verily are like Devas on earth;
They that worship them as the Lord Himself,
—Who the Ganga on His russet matted locks wears,
Will have their Karmas end consummated.
Tamil Meaning:
`இடபத்தை ஊர்தியாகவும், கொடியாகவும் உடையவனே! இறைவா! எங்கள் பெருமானே` என்று சிவனை எப் பொழுதும் துதித்து அவனது அருள் வடிவாகிய திருநீற்றை அன்புடன் அணிகின்றவர்கள் அவனுக்கு அடியராவார்கள், அவர்களை `இவர்களே நிலவுலகில் காணப்படுகின்ற தேவர்கள்` என்றும், `சிவபெருமான்` என்றும் கருதி அவரை மக்களின் வேறாக வைத்து வழிபடுகின்றவர்கட்கு அவரால் முன்பு செய்யப்பட்டுக் குவிந்து கிடக்கின்ற வினைகள் கெட்டொழிதல் உறுதி.
Special Remark:
தீவிர சத்தி நிபாதர்க்கன்றி ஏனையோர்க்குச் சிவனை யொழித்தொழிந்த தேவரை வழிபடாத நிலை உண்டாகாதாகலின் அவரை நோக்கி, `இவரே தேவருமாவர்` என்றார். முன்பு ``மூர்த்திகள் மூவர்க்கும் ஆம்`` என்றதும் அவரை நோக்கி. மந்த சத்தி நிபாதத்திற் செய்யும் வழிபாடு தீவிர சத்தி நிபாதத்தைத் தந்து அதன்வழி நிகழும் வழிபாட்டினால் வினையை ஒழிக்குமாதலின் `அவருக்கும் வினையில்லையாம்` என்றார். ``தேவர்கள், அண்ணல்`` என்பன செவ்வெண்.
இதனால், மாகேசுர பூசையும் சிவபூசையேயாய்ப் பிறப்பையறுத்தல் கூறப்பட்டன.
இங்கு இருக்கவேண்டிய இப்பாடல் `சிவபூை\\\\\\\\\\\\\\\\u2970?` அதிகாரத்திலும், அங்கு இருக்கவேண்டிய பாடல் இவ்வதிகாரத் திலுமாகப் பதிப்புக்களில் மாறியுள்ளன. எனினும் இப்பாடல் நாயனார் வழிவந்த ஒருவரால் செய்யப்பட்டதாகவே தெரிகின்றது. சில பிரதிகளில் இது காணப்படவும் இல்லை.
மிகைப் பாடல் தெ-ரை: சிவன் உயிர்கள் பொருட்டாக உண்டாக்கிய நவ தீர்த்தங்களில் சென்று முழுகும் பயன்பற்றிச் சொல்லுவோம் கேள்; `உயர்ந்தோர் யாவர்க்கும் ஒத்ததாகிய மெய்ஞ்ஞானத்தினாலே உயர்ந்து நிற்கின்ற மாகேசுரரது திருவடிகளைத் தூய்மையாக விளக்கி, அந்த நீரை உடல் முழுதும் படும்படி தெளித்துக் கொண்டாலே முத்தி கிடைக்கும் என்பது நமக்கெல்லாம் குருவாகிய திருமூலர் அருளிச் செய்தது.
கு-ரை: `எனவே, அது நவதீர்த்தங்களில் மூழ்குதலாம்` என்றபடி.