ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 12. குருபூசை

பதிகங்கள்

Photo

பகலு மிரவும் பயில்கின்ற பூசை
இயல்புடை யீசற் கிணைமல ராகா
பகலு மிரவும் பயிலாத பூசை
சகலமுந் தான்கொள்வன் தாழ்சடை யோனே.

English Meaning:
Practise Worship where neither Night nor Day is

The worship that you perform
By day and night,
Is to the Lord an offering of flower twain;
The worship that you perform
Where neither day nor night is
Is to Him of the flowing matted locks
Acceptance full and replete indeed.
Tamil Meaning:
பகலும், இரவும் ஆகிய கால வேறுபாடுகள் தோன்றுகின்ற பூசைகள் காலத்தைக் கடந்தவனாகிய சிவனுக்கு முற்றிலும் நேர்படும் பூசைகள் ஆகா. மற்று, அவ்வேறுபாடு தோன்றாத பூசைகளையே சிவன் முழுமையாக ஏற்பான்.
Special Remark:
`உலகியல் முற்றும் மறக்கப்படாத வரையில் பகலும், இரவுமாகிய காலவேறுபாடுகள் தோன்றாமற் போகமாட்டா. அதனால் அவை சிவன் ஒருவனையே நினைந்து செய்யும் பூசைகள் ஆதல் இல்லை. உலகியல் முற்றும் மறக்கப்பட்ட பொழுது மேற்கூறிய வேறுபாடுகள் தோன்றமாட்டா ஆதலால் அந்நிலையில் நின்று செய்யும் பூசைகளே சிவனேயன்றி வேறொன்றையும் நினையாத பூசையாம்` என்றபடி.
சண்டேசுர நாயனார் சிவபூசை செய்து கொண்டிருக்கும் பொழுது அவர்தம் தந்தை வந்து அவரை வைததையும் தண்டால் பலமுறை முதுகிற் புடைத்ததையும் அவர் சிறிதேனும் அறியா திருந்ததையும், பின்பு அவன் சிவபூசைக்கு அழிவை உண்டாக்கியதை உடனே அறிந்ததையும் இங்கு நினைவு கூர்க. அதுபோலும் சிவபூசையே முழுமையான சிவபூசை யாகும்.
``கையொன்று செய்ய விழியொன்று நாடக்
கருத்தொன்றெண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப்
புலால்கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க
விரும்புமியான்
செய்கின்ற பூசைஎவ் வாறுகொள் வாய்வினை
தீர்த்தவனே``l
எனப் பிற்காலப் பெரியார் அருளிச் செய்தது இக்கருத்துப் பற்றியேயாம். மலரால் செய்யப்படுவதனை ``மலர்`` என்று உபசரித்தார். சகலமும் - முற்றிலும்.
இதனால், சிவபூசை நிரம்பாவாறும், நிரம்புமாறு கூறப்பட்டன.