ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 12. குருபூசை

பதிகங்கள்

Photo

மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவயின் ஞான நெறிநிற்றல் அற்சனை
ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயலறல் தானே.

English Meaning:
Pray Thrice a Day

Morn, noon and eventide
Adore the Lord;
Adoring chant the word ``Nama`` — (I worship)
Chanting, invoke Him in luminaries three — the Sun,
Moon, and Fire;
The famed Nandi is the Lord Supreme.
Tamil Meaning:
குருவருளால் கேள்வியாகப் பெற்ற ஞானத்தைப் பின் சிந்திதத்ல, தெளிதல் என்பவற்றின்பின் நிட்டையாக முதிரப் பெறின் அவ்விடத்தில் அந்த நிட்டையில் நிற்றலே பரசிவ பூசை யாகும். (ஆகவே அந்நிலையை அடைந்தவர்க்கு ஏனையோர்க்குக் கூறப்பட்ட சிவபூசைகள் வேண்டாவாம்) அந்நிலையை அடையாது கேள்வி முதலிய மூன்றில் நிற்போர்க்கு, ``உள்ளம் பெருங்கோயில்`` என்னும் மந்திரத்துட் கூறியவாறு செய்யும் ஞான பூசையே சாதனமும், அப்பூசையின் பயனாகத் தற்போதம் கழன்றிருத்தலே பயனும் ஆகும்.
Special Remark:
`ஞானம் குருவருளாயன்றி வாராது` என்பது மேற் கூறப்பட்டமையால், இங்கு ``மேவிய ஞானம்`` என்றதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. ``மெய்ப்பரன்`` என்பது `உண்மைச் சிவன்` என்பதாய், பரவசிவனைக் குறித்தது. ஞானமாவது, அவனையறியும் அறிவேயாதல் அறிக. `நிட்டையே ஞானத்தின் நிறை நிலை` என்றற்கு அதனை `ஞானத்தில் ஞானம்` என்றும், ஏனைக்கேள்வி முதலிய மூன்றனையும், `ஞானத்திற் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத்தில் யோகம்` என்றும் சிவாகமங்கள் கூறுதல் காண்க.
இனி நிட்டை நிலையை அடைந்தோரும் அந்நிலையிலே மீட்சியின்றி நிற்கமாட்டாது மீள்வாராயின் ஞானத்திற் சரியை முதலிய வற்றில் உள்ளோர்க்குக் கூறப்பட்ட நெறியிற்றானே நிற்பர். அப் பொழுது அவையெல்லாம் `உபாயநிட்டைகள்` என, `நிட்டை` என்றே சொல்லப்படும். ஏனையோர் செய்வன எல்லாம் எவ்வகையாலும் `சரியை, கிரியை, யோகம்` என்றே சொல்லப்படும். நிட்டைக்குப் பயனே ஆனந்தமாக, உபாய நிட்டைக்குப் பயன் அருள்மயம் ஆதலே என்பதுபற்றி, `செயலறல் தானே சேவடி சேரல்` என்றார்.
இதனால், `நிட்டை நிலையை எய்தினோரும் அதனில் நிற்க மாட்டாது மீள்வாராயின் பின்னும் கிழ்நிலையை எய்தாமைப் பொருட்டு, குருபூசை சிவபூசைகளைச் செயற்பாலர்` என்பது கூறப்பட்டது.