ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 12. குருபூசை

பதிகங்கள்

Photo

ஆகின்ற நந்தி யடித்தா மரைபற்றிப்
போகின் றுபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறா(று) அதனின்மேற்
போகின்ற பொற்பையும் போற்றகின் றேனே.

English Meaning:
Nandi Imparts Upadesa

Grasping the lotus feet of Nandi that blesses me,
I shall relate the way of Upadesa,
That to redemption leads;
Of Puja that is performed;
And of the Way to transcend Adharas six
And to ascend beyond.
Tamil Meaning:
எனக்கு இனி வேறொரு துணையின்றாகத் தாம் ஒருவரே துணையாய் நிற்கின்ற நந்தி பெருமானது திருவடிகளைப் பற்றி நின்றே உயிர்கள் பற்றி ஒழுகுதற்குரிய இறைநூல், அவற்றின்வழி இறைவனை வழிபடும் வழிபாடு, அகக்கோயில்களாகிய ஆதாரங்கள், முப்பத்தாறு தத்துவங்கள், அத்தத்துவங்களைக் கடந்து அவையனைத் திற்கும் மேலே செல்கின்ற தூய்மை ஆகிய இவைகளை நான் கருத்தாக உணர்ந்து, உலகர்க்கும் உரைப்பேனாயினேன்.
Special Remark:
`இது குருவருளால் கிடைத்த பேறு` என்பதாம். இறைவன் உயிர்களின் பொருட்டு அருளிச்செய்தன ஆதலான், அவனது நூலாகிய வேத சிவாகமங்களை ``உபதேசம்`` என்றார். ``போதம்`` இரண்டில், முன்னது நடத்தல்; அஃதாவது ஒழுகுதல். பின்னது, கடந்து செல்லுதல். வேதச் சிறப்பு. ஆகமச் சிறப்பு முதலி யவைகளை நாயனார் முதற்றொட்டுக் கூறிவருதல் வெளிப்படை. தமது வரலாற்றை உணர்த்துதற் பொருட்டுப் பாயிரத்துள், ``நந்தி யருளாலே நாதனார் பேர்பெற்றோம்`` எனக் கூறிய அதனை இங்குக் குருவருளின் பெருமையை உணர்த்துதற் பொருட்டுக் கூறினார். குருவருளால் தாம்பெற்ற பேற்றினையும், குருவை மறவாமையும் கூறியதனால், `நீவிரும் குருவை அடையின் இப்பேற்றினைப் பெறலாம். பெற்றபின் குருவருளை மறக்கலாகாது` என்பது குறிப் பாயிற்று, ``போகின்ற`` இரண்டில் முன்னதில் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று. தூய்மையை, ``பொற்பு`` என்றார். வீட்டு நிலை, சுத்தநிலையாதலை அறிக.
இதனால், குருவருளின் சிறப்பும், அதனைப் பெற்றோர் அவரை நினைந்தே எதனையும் செயற்பாலர்` என்பதும் கூறப்பட்டன.