ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 10.அருளொளி

பதிகங்கள்

Photo

கூறுமின் நீர்முன் பிறந்திங்(கு) இறந்தைமை
வேறொரு தெய்வத்தின்மெய்ப்பொருள் நீக்கிடும்
பாறணி யும்உடல் வீழவிட்(டு) ஆயுயிர்
தேறணி யாம்இது செப்பவல் லீரே.

English Meaning:
Save the Soul

If other gods be born, live and die
Are they the True Ones? Speak;
Let us this body leave, to vultures a prey
And save our Soul – this you should proclaim.
Tamil Meaning:
உலகீர், திருவருளை உள்ளவாறு நீர் உணர்ந்தீ ராயின், சிவனை யொழித்து ஒழிந்த தெய்வங்களுள் எதுவாயினும் அது பல்கால் பிறந்து வாழ்ந்து இறந்தமையை வேதாகம புராணங்களைச் சான்று காட்டிப் பலர்க்கும் விளக்கிக் கூறுங்கள். அங்ஙனம் கூறுமாற்றால் அவர்கள் வேறு எந்தத் தெய்வத்தையும் அதனிடத்து மெய்ப்பொருள் தன்மையை ஏற்றி மயங்கும் மயக்கத்தை நீக்குங்கள். இவ்வாறு செய்தலே பருந்துகள் கூட்டமாகக் கூடி உண்ணத்தகும் இவ்வுடல் அங்ஙனம் ஆகும்படி கீழே வீழ்ந்த காலத்தில் அரிய உயிர்தான் தனது உண்மை நிலையைத் தெரிந்து உய்யும் வழியாகும். ஆயினும், இவ்வாறு செய்ய நீர் மாட்டுவீரோ?
Special Remark:
``செய்ய மாட்டுதல் அரிது`` என்றபடி,
``நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறு கோடிநா ராயணர் அங்ஙனே;
ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர்;
ஈறி லாலதவன் ஈசன் ஒருவனே`` *
``எல்லார் பிறப்பும் இறப்பும்இயற் பாவலர்தம்
சொல்லால் தெளிந்தேம்; நம் சோணேசா - இல்லில்
பிறந்தகதை யும்கேளேம்; பேருலகில் வாழ்ந்து,(உ)ண்டு
இறந்தகதை யும்கேட் டிலேம்`` *
``தாமோ தரன் முதலோர் சாதல்நூல் சாற்றுவதும்
பூமேலோர் பொன்றுவதும் கண்டோமே`` 8
ஏனைய தேவர் பலரும் பிறத்தல், பின்பு உண்டு வளர்ந்து வாழ்தல், பின்பு இறத்தல் ஆகிய இவைகளை உடையவராதற்கு வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் ஆகியவை அனைத்தும் சான்றா இருக்கவும் அவரது அருள்களை, `திருவருள்` என்றல் மயக்க உணர்வேயாம் என்பதும், உண்மையுணர்வைப் பெற்றார் தாம் `சிவனது அருளே திருவருள்` என உணர்தலோடு பிறர்க்கும் அதனை உணர்த்தற்பாலர் என்பதும் கருத்து.
இதனால் `ஒளியாகிய திருவருளாவது சிவனது அருளே` என்பது முடித்துக் கூறப்பட்டது.