ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 10.அருளொளி

பதிகங்கள்

Photo

அருளது என்ற அகலிடம் ஒன்றும்
பொருளது என்ற புகலிடம் ஒன்றும்
மருளது நீங்க மனம்புகுந் தானைத்
தெருளுறும் பின்னைச் சிவகதி யாமே.

English Meaning:
Grace is the Refuge

There is a Space Vast that is Grace
There is a Refuge Safe that is Lord
In me He entered, my darkness to dispel;
Know Him fully; then indeed, is Siva-State.
Tamil Meaning:
பக்குவம் எய்தியபொழுது ஆணவ மலம் நீங்கத் திருவருட் பதிவு உயிரினிடத்து நிகழும். அப்பொழுது தான் உயிர் தன்னையும், தலைவனையும் உணரும் நிலையைப் பெறும். அப்பேற்றால் அது திருவருளாகிய பரவெளியிற் சென்று, அதன்கண் விளங்குகின்ற சிவத்தைப் புகலாக அடையும். அவ்வாறு அடைந்து நிற்றலே உயிர்பெறும் முடிநிலப் பேறாகும்.
Special Remark:
மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. ``பின்னைச் சிவகதியாம்`` என்பதை இறுதியில் வைக்க. மருள் - மயக்க உணர்வு. அஃது ஆணவ மலத்தால் நிகழ்வன. ``நீங்க`` என்னும் செயவெனெச்சம் நிகழ்காலத்தில் வந்து உடனிலையாய் நின்றது. ``புகுந்தானை`` என்ற அனுவாதத்தால் அவன் புகுந்தமை முன்பே பெறப்பட்டது. சிவன் தனது அருளி வழியே புகுவன் ஆகலின் அவன் புகுந்தமை கூறவே அவனது அருள் புகுந்தமைதானே பெறப்பட்டது. தன்னை உணர்ந்த வழியே தலைவனை உணர்தல் கூடுமாகலின் தலைவனை உணர்தல் கூறவே தன்னை உணர்தலும் பெறப்பட்டது. உறு, துணைவினை. ``தெருளும், ஒன்றும், ஒன்றும்`` என்னும் பயனிலைகட்கு `உயிர்` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. ஒன்றுதல் - பொருந்துதல். செய்யுள் நோக்கி, ``பொருளது என்ற புகலிடம்`` என்றாராயினும், `புகலிடம் என்ற பொருள்` என்றலே கருத்தென்க. எல்லாம் பொருளேயாயினும் உண்மையில் `பொருள்` எனப்படுவது மெய்ப்பொருளேயாதல் பற்றி அதனையே இங்கு, ``பொருள்`` என்றார். ``அது`` மூன்றும் பகுதிப் பொருள் விகுதிகள். `அதுவே சிவகதி` என்றற்கு, ``பின்னைச் சிவகதியாம்`` என்றார்.
இதனால், திருவருள் ஒளியாதல், அதனைப் பெற்றார் பெறும் பேறுபற்றி உணர்த்தப்பட்டது.