ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 10.அருளொளி

பதிகங்கள்

Photo

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன்பெருந்தன்மையைக்
கூடிய வாறே குறியாக் குறிதந்தென்
ஊடுகின் றாள்அவன் தன்அருள் உற்றே.

English Meaning:
Imparting Grace Siva Grants His Form to Jiva

I danced and sang and wept and lamented
Thus I sought Him, and Siva`s greatness saw,
And as I with Him united
He, His indefinable Form granted
And in me pervaded, His Grace imparting.
Tamil Meaning:
திருவருளை நிரம்பப் பெறாத நிலையில் யான் அவனது உண்மை நிலையை எனக்கு இயன்றவகையில் ஆடுதல், பாடுதல் முதலியன செய்து அறிய முயன்றேன். அதன் பயனாக அவனது அருளை நிரம்பப் பெற்றமையால், அவன் என் அறிவால் நோக்காது அவன் அருளால் நோக்கும் முறையை உணர்த்தி, அவ்வாறு நோக்கிய பொழுது அவன் என்னின் வேறாகாது என்னுள்ளே விளங்கினான்.
Special Remark:
எனவே, `உயிர் இறைவனைத் தன்னின் வேறாகப் புறத்தே காண முயலும் நிலையெல்லாம் திருவருளை முற்றப் பெறாத நிலை` என்பதும், `முற்றப் பெற்ற நிலையில் அஃது இறைவனைத் தன்னுள்ளே கண்டு களிக்கும்` என்பதும் விளக்கியவாறு. காண முயன்ற முயற்சியைக் கண்டதாகக் கூறியது, `அம்மி துணையாக ஆற்றைக் கடந்தான் மூழ்கினான்` என்பது போலக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறிய, உபசார வழக்கு. முதல் தொடரில் செயப்படு பொருளும் கருவியும் பயனிலைக்குப் பின்னே நின்றன. `கூடிய வாற்றால்` என உருபு விரிக்க. உற்று - உற்றதனால். `தன் அருளை உற்றதனால் அவன் வந்து நின்றான்` எனக் கூட்டி முடிக்க.
இதனால், திருவருள் முதற்கண் சிற்றொளியாய்த் தோன்றிப் பின் பேரொளியைத் திகழ்தல் கூறப்பட்டது.