ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 10.அருளொளி

பதிகங்கள்

Photo

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னை வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே.

English Meaning:
Light the Lamps of God by Inner Light

Light the Lamp, and see the Space
Before the Lamp all pangs cease
They that have the Light to light the Lamp
Are but the Light, in the Divine Lamp shine.
Tamil Meaning:
பாசஞான பசுஞானங்களாய்த் திரிபு கொள்கின்ற மருளில் பொருந்திய உயிரின் உணர்வாகிய திரியில் பதிஞானமாகிய திருவருள் என்னும் சுடரைக் கொளுத்தி அஃது எரிந்து வீசுகின்ற ஒளியினால் எல்லாப் பொருட்கும் இடம் தந்து வியாபகமாய் நிற்கின்ற ஆகாயம் போன்று எல்லையற்று நிற்கும் சிவத்தைத் தரிசியுங்கள். அப்பொழுது அந்தத் திருவருளின் ஒளியில் பாசம் காரணமாக முன்பு உளவாகிய துன்பங்கள் யாவும் முழுதுமாக அற்றொழியும். இவ்வாறு பசுஞானமாகிய அறிவைப் பதிஞானமாய் விளங்கச் செய்கின்ற திருவருளாகிய விளக்கைப் பெற்றவர்களே அந்த விளக்கினுள்ளே விளங்கும் மற்றொரு விளக்காய் விளங்குவார்கள்.
Special Remark:
இம்மந்திரத்தின் பொருள்,
``உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே தகளி யாக மடம்படும் உணர்நெய் அட்டி உயிர்எனும் திரிம யக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பர் காளை தாதை கழலடி காண லாமே``
- திருமுறை - 4-75-4.
என்னும் அப்பர் திருமொழியில் அமைந்து விளங்குதல் காண்க. இதனுள், \\\"விளக்கு`` என்பனவும், \\\"வெளி`` என்பதும் உருவகங்கள். விளக்கில் விளங்கும் விளக்காவது, பெருவிளக்கின் ஒளியினுள் தனது ஒளிவேறு தோன்றாது அடங்கி விளங்க இருக்கும் சிறுவிளக்கு. இதனை, `பகலில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு` எனவும் கூறலாம். தாம், ஏ அசைகள்.
இதனால், `திருவருள் ஒளியாய் நின்று பயன் தருமாறெல்லாம் உணர்ந்து அதனாற் பயன்கொள்க` என்பது விதிக்கப்பட்டது.