ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 13. அபக்குவன்

பதிகங்கள்

Photo

 வாயொன்று சொல்ல மனமொன்று சிந்திக்க
நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
தீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே.

English Meaning:
Realize Lord in Purity of thought, word and deed

The lips utter one thing;
The mind thinks another;
And the deed does a third,
Thus you behave not;
Gracious Lord! You Rock of Ages!
I know You as the Fire-hued Lord,
And having known that
None dares know me as creature insensate.
Tamil Meaning:
பெருந் தகுதியாகிய பக்குவத்தை எய்திய மாணவனே, நீ யாதொரு செயலிலும் `மனம், மொழி மெய்` என்னும் மூன்றும் ஒருவழிப்பட நிற்றல் வேண்டுமன்றி, அவை தனித்தனி வேறு வேறு வழிப்பட நிற்றல் கூடாது. அங்ஙனம் அவை ஒருவழிப்பட நிற்றலே உனக்கு நன்மையைப் பயப்பதாகும். அவை வேறு வேறு வழிப்படல் இழந்தோரது இயல்பாதலின், நீ அவை அவ்வாறுபட நிற்பின், உன்னை யான், `பக்குவம் வாயாத இழிமகன்` என்று உறுதி யாகக் கொண்டு விலக்குவேன். ஆனால், உணர்விலாராய உலகர் அது பற்றி என்னைப் பின் வெகுளி மிகுதியால் பேய்த்தன்மை எய்தியவன் என இகழ்வர்.
Special Remark:
`அதுபற்றி எனக்கு வருவதோர் இழுக்கில்லை` என்பதாம். `அங்ஙனம் செய்யாமையாகிய அதுவே உறுதி` என்க. அங்ஙனம் செய்யாமை, அவை ஒருவழிப்பட்டு நிற்கச் செய்தலை உணர்திற்று. `தீயை` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. தீமை, இங்கு இழிவு. தன் ஈற்றடிக்கு இவ்வாறன்றி ``என்று`` என்பது ``தெளியார்`` என்பதன் முதனிலையோடு முடிந்தாக வைத்து, `அது பற்றி என்னைப் பிறர் பழியார்` என்று உணர்த்தலுமாம். இங்கும் `உன்னை` என்றே பாடம் ஓதி அதற்கு இயைய உரைப்பாரும் உளர்.
இதனால், பக்குவம் எய்திய மாணாக்கற்கு அபக்குவ நெறியிற் செல்லாதவாறு விழிப்பூட்டு முகத்தால் அபக்குவிகளது போலி ஒழுக்கத்தின் இயல்பும், அவர்க்கு நல்லாசிரியரது அருள் கூடாமையும் கூறப்பட்டன.