ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 13. அபக்குவன்

பதிகங்கள்

Photo

ஏயெனின் என்என மாட்டார் பிரசைகள்
வாய்முலை பெய்ய மதுரம்நின் றூறிடுந்
தாய்முலை யாவ தறியார் தமருளோர்
ஊனிலை செய்யும் உருவிலி தானே.

English Meaning:
They know not the Mystery of Body

You beckon them, but they hearken not
The ignorant multitude they are;
The mother`s milk flows sweet in the mouth,
But even the dear and near know not
How the mother`s breast becomes so;
Verily, it is the Formless Being that shapes this body-form.
Tamil Meaning:
உலக மக்கள், அறிவுடையரோ `ஏ` என அழைத்தால் அவர்க்கு, `ஏன்` என மறுகுரல் கொடுக்கும் அத்துணைப் பக்குவமும் இலர். அவர் தாயின் முலை அவர் பெற்ற குழவி தன்வாயில் வைத்த பொழுதே பால் சுரத்தலல்லது, எப்பொழுதும் பால் சுரவாத தன்மையை உணர்தல் இயலாததே. அவ்வியல்புடைய இனத்தவரது உள்ளத்திலும் உருவமற்றவனாகிய சிவபெருமான் அங்ஙனம் உருவமற்றவனாகவே நிலை பெற்றிருக்கின்றான்.
Special Remark:
`ஏ` என்பது வடமொழியில் திரிபு. வரையறை யின்மை யின் இதன்கண் யகர உடம்படுமெய் தோன்றிற்று. இதன்கண் யகர உடம்படுமெய் தோன்றிற்று. முதற்கண் நின்ற ``முலை`` என்பது பின்னர் வரும் அதனைச் சுட்டும் சுட்டளவாய் நின்றது. பெய்தலுக்கு வினைமுதலாகிய `குழவி` என்பது வருவிக்க. மதுரம் - இனிமை. அஃது ஆகு பெயராய்ப் பாலை யுணர்த்திற்று. `குழவி வாய்வைத்த பொழுதே தாயின் முலை பால்சுரக்கும் இயல்பினை அறியார்` என்றது, `இறைவனது அருள் அவனை உணர்ந்து போற்றுவார்க்கே விளங்கி நின்று நலம் செய்யும் என்பதனை அறிந்து அவனை உணர முயலார்` என்றதாம். `அதற்குக் காரணம் பக்குவம் இன்மையே` என்பது கருத்து. `அன்னோர்க்குத் தமராய் உள்ளோரது ஊனின்கண்ணும் உருவிலி நிலை செய்யும்` என்க. தமர் - சுற்றத்தார். இஃது இங்குப் பிறப்புப் பற்றியதாகாது, இயல்பு பற்றியதாய் நின்று. இதன் ஈற்றடி இரண்டாம் அசை எதுகையாய் நின்றது.
இதனால், பக்குவம் இல்லாதார் இறைவனை உணர்ந்து அவனது அருளால் நலம்பெறுந் தன்மை இலராதல் கூறப்பட்டது.