ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 13. அபக்குவன்

பதிகங்கள்

Photo

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடும் குழிவிழு மாறே.

English Meaning:
Blind leading the Blind

They seek not the Guru that blindness cures
They seek the Guru that cures not blindness;
The blind and the blind in a blind dance shuffled
And the blind and the blind in a deep pit together fell.
Tamil Meaning:
குருடாய இரண்டு குழந்தைகள் தம்மிற் கூடிக் கண்ணைமூடி ஆடும் ஒருவகை விளையாட்டை விளையாடி, அதனால் இரண்டும் பாழுங் குழியில் விழுந்து அழுந்தினாற்போலப் பக்குவம் இல்லாத சிலர் தமது அறியாமையைப் போக்கும் ஆற்றலுடைய நல்ல குருவைக் கொள்ளாமல், அவ் ஆற்றல் இல்லாத போலிக் குருவைக் குருவாகக் கொண்டு, அவர் அருள் வழங்க பெறுதலைச் செய்யின், இருவரும் பிறவித் துன்பத்தில் வீழ்ந்து அழுந்துவார்கள்.
Special Remark:
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. முதற் கண் நின்ற `குருடு` இரண்டும் சிறப்புருவகமாய். மல மறைப்பால் உண்டான அறியாமையைக் குறித்தன. இதனானே, நல்லாசிரியர் குருட்டினை நீக்கும் மருத்துவம் வல்ல மருத்துவராலும், போலி ஆசிரியர் அம் மருத்துவம் உணராத போலி மருத்துவராலும் பெறப் பட்டன. கண்ணுள்ள குழந்தைகள் கண்ணை மூடி ஆடினாலும் முன்னைப் பழக்கத்தால் தீங்கின்றி ஆடி மகிழ்வடையும். கண்ணில் லாத குழந்தைகள் பிற விளையாட்டு விளையாடினாலும் தீங்கடையா. குருட்டாட்டம் ஆடின் வழியறியாது குழியில் வீழ்ந்தொழியும். அதுபோல நல்லாசிரியர் மாணவரது பக்குவத்திற்கு ஏற்ப எவ்வாறு அருளினும் பயன் உண்டாம். ஆசிரியரல்லாதார் கிரியா மார்க்கத்தை உணர்த்தினும், அவர்பால் அதனைச் சிலர் பெறினும் பயன் ஓரளவேனும் உளதாகும். அவர் ஞானத்தை உணர்த்தினும், அதனைச் சிலர் பெறினும், `பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது` என்னும் பழமொழியோடொப்ப இருவரும் முன்னையினும் பார்க்கப் பெரிய தோர் அறியாமையில் வீழ்ந்து அழுந்துபவர் என்பது உவமையால் பெறப்பட்டது. `கண் குருடுபோல அறியாமையும் அகக்கண் இன்மை யாகிய ஒருவகைக் குருடே` என்பது தோன்ற, மல மறைப்பினையும் இங்குக் குருடாகவே உருவகித்து ஓதினார்.
இதனால், பக்குவம் இல்லாதார்க்கு ஞானத்தைப் பெறும் வாயில் உண்டாகாமை கூறப்பட்டது.