ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்

பதிகங்கள்

Photo

சன்மார்க்க சாதனந் தான்ஞானம் ஞேயமாம்
பின்மார்க்க சாதனம் பேதைய தாய்நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்க்கம் தானவ னாகும்சன் மார்க்கமே.

English Meaning:
Sanmarga Path Purest

Alone of all paths
Sanmarga grants God-head through knowledge;
The rest of paths are for un-illumined;
Renouncing the ways of impurities
And transcending limits of Turiya
It merges I in You;
Verily, Sanmarga is Path Purest.
Tamil Meaning:
ஞானம் ஒன்றே சன்மார்க்கத்தில் கொள்ளப்படும் சாதனமாகும். அந்தச் சாதனம் பின் ஞேயமாகிய சாத்தியத்தை அடை விக்கும். சகமார்க்கம் முதலியவைகளில் ஞானமல்லாத பிறவே சாதனங்களாம். பிற மார்க்கங்களைக் கடந்து சன்மார்க்கத்தில் நிற்போர் அதில் துரியத்தைக் கடந்தபொழுது விரும்புகின்ற சன்மார்க்கம் சீவன் சிவமாம் தன்மையாகிய சன்மார்க்கமே.
Special Remark:
`ஞானந்தான் சன்மார்க்க சாதனம்` என மாற்றி, `அதனால், ஞேயம் ஆம்` என வேறு தொடராக்கியுரைக்க. பிறவற்றை, `பேதை - பேதைமை` என்றது, ஞானமல்லவாதல் பற்றி. `ஞான மாவது, தத்துவ ஞானமே` என்பது மேலே கூறப்பட்டது. சன்மார்க் கத்தில் நிகழ்வதை, ``துன்மார்க்கம் விட்டது`` என்றார். துரிய நிலை யிலும் திரிபுடி ஞானம் அற்றொழியாமையால் ``துரிசு`` என்றார்.
இதனால், அதீதமாகிய ஆனந்த நிலையே சன்மார்க்கத்தில் சன்மார்க்கமாதல், துரிசறுதலாகிய ஏதுக்காட்டி விளக்கப்பட்டது.