ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்

பதிகங்கள்

Photo

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்க கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யுங் குவாலயத் தோர்க்குத்
தரும்முத்தி சார்பூட்டும் சன்மார்க்கந் தானே.

English Meaning:
Guru-Adoration is Sanmarga

To see him, to adore him, to meditate on him
To touch him, to sing of him,
To bear his holy feet on humbled head,
They that render devotion to Guru
In diverse ways thus,
They indeed walk the Sanmarga path
That to liberation leads.
Tamil Meaning:
குருபத்தி செய்யும் நன்மாணாக்கர் கண்ணால் காணுதல், திருமுழுக்கு, ஒப்பனை, புகை, ஒளி, படையல், மலரிடல் முதலாக முறைப்படி வழிபடுதல், தியானித்தல், தீண்டி அடிவருடல் முதலியன செய்தல், துதித்தல், பாதுகையைத் தலைமேல் தாங்குதல் முதலியவற்றால் குருவை வழிபட்ட வழியே சன்மார்க்கமாகிய ஞானம் கைகொடுத்து, முத்தி நிலையைத் தரும்.
Special Remark:
`குருபத்தி செய்யும் குவலயத்தோர்` என்று எடுத்துக் கொண்டு, ``சூட`` என்பதன்பின், `அவர்க்கு` என ஓதற்பாலதனை இவ்வாறு ஓதினார். ``கீர்த்திக்க`` என்பது வடநூல் மதமுடிபு. `குவலயத் தோர்க்கே சன்மார்க்கம் சார்பு ஊட்டும்; முத்தி தரும்` எனக் கூட்டுக. சார்பு ஊட்டுதல், தன்னோடு இயைபினை உண்டாக்குதல். தான், அசை.
இதனால், `ஞானம், நல்லாசிரியரானே (சற்குருவாலே) தரப் படும் நன்னெறி - சன்மார்க்கமாம்` என்பது கூறப்பட்டது. அந்நெறி ஞானமேயாதல் அறிக. இதனுள் குருபத்தி செய்யும் வகையும் கூறப் பட்டமை காண்க.