ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 8. ஞானம்

பதிகங்கள்

Photo

நண்ணிய ஞானத்தில் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவம் கடந்த பிணக்கற்றோன்
கண்ணிய நேயம் கரைஞானம் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே.

English Meaning:
Attainments at Four Jnana Stages

The Jnani attains all the four stages in Jnana;
Jnana-in-Jnana is to transcend the ``I`` and ``Mine``
Yoga-in-Jnana is to envision in the Light of Nadanta;
Kriya-in-Jnana is to seek the liberation by good.
Tamil Meaning:
ஞானத்தில் ஞானம் முதலியவற்றை அடைவோன், முதற்கண் வினைக்கட்டு அற்றவனாயும், இரண்டாவது சிவஞானத் தால் ஞேயமாகிய சிவத்தைத் தரிசித்தவனாயும், மூன்றாவது மும் மலங்களின் வாசனையும் நீங்கிய நின்மலனாயும், முடிவில் சிவனை அனுபவமாய்ப் பெறுதலாகிய முத்தியை அடைந்த, முடிந்த பேறுடையவனாயும் விளங்குவன்.
Special Remark:
ஞானாதி நண்ணுவோனது தன்மையைக் கீழிருந்து கூறும் முறையாற் கூறினார். இந்நான்கு அனுபவங்களும் கேட்டல் முதலிய நான்கினாலும் நிகழ்வனவாதல் அறிக. வினைக்கட்டு நீங்கினமைகூறவே, அதற்குப் பற்றுக்கோடாகிய மாயைக்கட்டு நீங்கினமையும் தானே பெறப்பட்டது. கண்ணல் - கருதல். கரை ஞானம் - மேல் எல்லையாகிய ஞானம். `கரை ஞானத்தால்` என உருபு விரிக்க. திண்மை வாதனை காரணமாக அசைதல் இன்மை. `உறைப்பு` என்றபடி. சித்தன் - சித்திக்கப் பெற்றவன்.
இதனால், மேற்கூறிய நான்கு படிகளிலும் நிகழும் அனுபவங்கள் கூறப்பட்டன.