ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 8. ஞானம்

பதிகங்கள்

Photo

இருக்குஞ் சேம இடம்பிரம மாகும்
வருக்கஞ் சராசர மாகும் உலகம்
தருக்கிய ஆசார மெல்லாந் தருமே
திருக்கிலா ஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே.

English Meaning:
Unitive Attainment of Jnani

Brahman shall be his impregnable abode,
Universe, his kith and kin;
Diverse paths the world presents
All, all shall be his;
For, verily he has realized
The pure Jnana, free of doubt.
Tamil Meaning:
மாறுபாடில்லாத ஞானத்தை ஓர்ந்துணர்ந்தவர்க்கு அவர் இருத்தற்குரிய பாதுகாவலான இடம் `பிரமம்` எனப்படுகின்ற சிவமே. ஏனெனில், உலகம் `இயங்கியற்பொருளும், நிலையியற் பொருளும்` என்னும் ஈரினமாய் நின்று உணர்வை அலைப்பனவாம். (ஆதலின் அவை அவர்க்கு இருத்தற்குரிய இடமாகா என்பதாம்.) ஆதலின், சிவ வியாபகத்தில் நிற்கின்ற பெருமகிழ்வோடு செய்கின்ற செயல்களே, எல்லா இன்பங்களையும் தருவனவாம்.
Special Remark:
ஈற்றடியை முதலில் வைத்தும், `உலகம் சராசர வருக்க மாகும்` என மாற்றியும் உரைக்க. முதல் இரண்டடிகள் காரிய காரணப் பொருளவாய் நின்றன. தருக்குதலோடு நிகழ்கின்ற ஆசாரத்தை, ``தருக்கிய ஆசாரம்`` என்றார். ஆசாரம் - நடை; செயல்கள் ``எல்லாம்`` என்றது, `உலகர்க்கு `நன்மை, தீமை` என இருவகையாய்த் தோன்றி நிகழும் பலவும்` என்றவாறு. `அருள்வழி நின்று செய்யின், தீயசெயல்களும் நல்ல செயல்களாய் இன்பம் பயக்கும்` என்றதனால், `அருளை மறந்துசெய்யின், நல்லசெயல்களும் தீயசெயல்களாய்த் துன்பம் பயக்கும்` என்பது போந்தது.
``அரனடிக் கன்பர் செய்யு ம் பாவமும் அறமதாகும்;
பரனடிக் கன்பி லார்செய் புண்ணியம் பாவ மாகும்;
வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி
நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே``*
என்னும் சிவஞான சித்திச் செய்யுளும், திருமுறைகளிலும் இத்தக்கன் வரலாறு சண்டேசுர நாயனார் வரலாறுகள் சிறந்தெடுத்தோதப்படுத லும் நன்குணரத்தக்கன. `சிவவியாபகத்தின்நீங்கி உலகிடைப்புகின் தீங்கு வருதலையுணர்ந்து ஞானிகள் அதனின் நீங்காது அதனுட்டானே நிற்பர்` என்பதை உமாபதிதேவர்,
``புலனடக்கித் தம்முதற்கட் புக்குறுவர்; போதார்
தலன்நடக்கும் ஆமை தக`` 1
என்று அருளிச் செய்தார். இதனானே,
``ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து``2
என்னும் திருவள்ளுவர் திருமொழியும் இப்பொருட் குறிப்புடைய தாதல் அறிந்து கொள்ளப்படும்.
இதனால், தன் பணியறுத்து அருள்வழி யொழுகுதல் ஞானமாதல் கூறப்பட்டது.