ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 8. ஞானம்

பதிகங்கள்

Photo

சத்தமும் சத்த மனமும் தகுமனம்
உய்த்த உணர்வும் உணர்த்தும் அகந்தையும்
சித்தம்என் றிம்மூன்றும் சிந்திக்கும் செய்கையும்
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே.

English Meaning:
Jnani Transcends Nada

Out of the primal Principle of Sound (Nada)
The Mind springs;
And out of the Mind — Intelligence, Egoity and Will;
They who have mastered these three,
And the Mind`s cogitational activity as well,
Verily have mastered Nada
And have truly attained Jnana.
Tamil Meaning:
ஓசை முதலிய புலன் வகைகளும், அவற்றைப் பொறிகளின் வழிச்சென்று பற்றுகின்ற மனமும், பின்பு அம்மனம் பொதுப்படப்பற்றி ஐயுற்றதை ஒருதலையாகத் துணியும் புத்தியும், எவ்விடத்தும் எழுச்சியுற்று எவ்வுணர்வையும் உணரத் தூண்டுகின்ற அகங்காரமும். அம்மூன்றானும் பெற்ற தெளிவுணர்வைப் பதியக் கொண்டு பின்னும் நினைப்பதாகிய சித்தமும் என்னும் இவற்றினது இயல்பை நன்குணர்தலே ஓசை முதலிய ஐம்புலன்களையும் கடந்த ஞானிகள் பெற்ற ஞானமாகும்.
Special Remark:
ஓசை முதலிய புலன்களே காரண நிலையில் தன் மாத்திரைகளாய் நின்று ஆகாயம் முதலிய பூதங்களைத் தோற்று வித்தலாலும், பின்னும் தன்மாத்திரையாய் ஐம்பூதங்களோடும் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களுக்குத் துணையாய் நின்று அவை தத்தம் காரியங்களைச் செய்ய உதவுதலாலும், `ஞானேந்திரியம், கன்மேந்திரியம், மாபூதம்` என்பவற்றையும் `புலன்வகை` என அடக்கினார். எவ்விடத்தும் ``சத்தம்`` என்றது, ஏனைப் பரிசம் முதலிய வற்றிற்கு உபலக்கணம். அஃது அதன் வகையை உணர்த்திற்று. ஆகவே, `புலன் வகை` என்றதனால், `பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து` ஆக இருபது கூறப் பட்டனவாம். இவற்றோடே மனம் முதலிய அந்தக் கரணங்கள் நான்கும் கூறப்பட்டமையால், சிவாகமங்களில் `ஆன்ம தத்துவம்` என எண்ணப்படும் இருபத்து நான்கு தத்துவங்களும் கூறப்பட்டதாயிற்று. சிறிது சிறிது வேறுபாட்டோடே இவை வைதிக சமயங்கள் எல்லா வற்றாலும் உணரப்பட்டன. ஆதலின், இவற்றது இயல்பை உணரும் ஞானத்தையே தத்துவஞானமாக ஓதினார். ``சுவைஒளி ஊறோசை`` என்னும் திருக்குறளையும் நோக்குக. வைதிக சமயங்களின்வழியும், அவற்றிற்கு ஒத்த அளவில் சைவாகமங்களின் வழியும் இவற்றின் இயல்பை உணர்ந்த பின்பு, சைவாகமம் பற்றியே சிறப்பாக உணரத் தக்க வித்தியா தத்துவ சிவ தத்துவங்களின் இயல்பை விரைய உணர்வர் என்பது கருத்து. வித்தியா தத்துவம், `காலம், நியதி` கலை, வித்தை, அராகம், புருடன், மாயை` என ஏழு. சிவதத்துவம், `சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி, சிவம்` என ஐந்து, ஆக, `தத்துவம் முப்பத்தாறு` என்பது சைவாகமங்களின் முடிபு. இவற்றின் இயல்பெல்லாம் அவ் ஆகமங்களிலும், அவற்றை முதலாகக் கொண்டெழுந்த பிரகரணங்களிலும், மெய்கண்ட சாத்திரம் முதலிய சித்தாந்த நூல்களிலும் காணப்படுகின்றன.
சிவ தத்துவம் ஐந்தும் ஏனைத் தத்துவங்களை இயக்கிநிற்கும் முறையால் ஆன்மாவிற்கு உதவுவன அன்றி, அவை ஏனைத் தத்துவங்கள்போல் ஆன்மாவிற்குநேரே உடம்பாய்ப்பொருந்தி நின்று உதவுவன அல்ல. வித்தியா தத்துவங்கள் ஆன்மாவின் அறி விச்சை செயல்கள் வெளிப்படுதற்குக் காரணமாய், அதனோடு ஒட்டி ஒன்றாய் நின்று ஆன்மாவை ஆன்மாவாகச் செய்யும் இயல்புடைமையால் அவை அனைத்தையுமே `புருடன்` என ஒன்றாக வைத்து, தத்துவங்களை, `இருபத்தைந்து` என்றே கூறுதலும் உண்டு.
``ஐயஞ்சின் அப்புறத் தானும், ஆரூ ரமர்ந்தஅம் மானே``
என்ற திருநாவுக்கரசர் திருமொழி இம்முறைபற்றி எழுந்ததே. தத்துவங்கள் மாயையின் காரியங்களாம். அவற்றின் இயல்பை ஆராய்ந்து உணரவே அவற்றினின்றும் நீங்குதல் உளதாம் என்க. தொகுத்தல் பெற்ற அகரத்தை விரித்து, `சித்தம் என்ற செய்கையும்` என இயைக்க. செய்கையுடையதனை, ``செய்கை`` என்றார்.
இதனால், தத்துவங்களை ஆராய்ந்து உணர்தல் ஞானமாதல் கூறப்பட்டது.